திமுகவுடன் கூட்டணி வேண்டாம்.. பொதுக்குழுவில் பொங்கிய தேமுதிக எம்.எல்.ஏக்கள்!
சென்னை: தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் திமுகவுடன் கூட்டணி வைக்கவே வேண்டாம் என்று தேமுதிக எம்.எல்.ஏக்கள் பேசியுள்ளனர். அத்துடன் காங்கிரசுடன் கூட்டணி அமைப்பது பற்றி எவருமே வாயே திறக்கவும் இல்லையாம்.
லோக்சபா தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க பாஜக, காங்கிரஸ், திமுக ஆகியவை முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. திமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றால் மகிழ்ச்சி.. பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்று கோவையில் நேற்று கூட திமுக பொருளாளர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்த பரபரப்புக்கு மத்தியில் நேற்று தேமுதிக பொதுக்குழு கூடியது. அப்பொதுக்குழுவில் பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி திமுகவை கடுமையாக சாடிப் பேசினார். அதேபோல் 2 தேமுதிக எம்.எல்.ஏக்களும் திமுகவுடன் கூட்டணி வைக்கவே வேண்டாம் என்று விமர்சித்துப் பேசியுள்ளனர்.
2016 சட்டசபை தேர்தலை மனதில் வைத்துதான் கூட்டணியை உருவாக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியிருக்கின்றனர். இதே கருத்தை தேமுதிக நிர்வாகிகள் பலரும் பேசியதாக கூறப்படுகிறது.
இந்த பொதுக்குழுவில் ஒருவர் கூட காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது பற்றி பேசவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.