ஹைட்ரோ கார்பனுக்கு எதிர்ப்பு… நெடுவாசல் ஆலோசனைக் கூட்டத்தில் எடுத்த முடிவுகள் என்னென்ன?
ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான போராட்டத்தை மீண்டும் கையில் எடுப்பது தொடர்பான கூட்டம் இன்று நெடுவாசலில் நடைபெற்றது. அதில் பல்வேறு விதமான போராட்டங்கள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
புதுக்கோட்டை; நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக 22 நாட்கள் நடந்த போராட்டம் நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழக அரசின் உறுதிமொழியை ஏற்று 3 கிராமங்களிலும் பொதுமக்கள் தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்தி வைத்தனர். மக்களுக்கு எதிரான எந்த திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தாது என்று உறுதிமொழியும் அவர்களுக்கு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் மக்களின் எதிர்ப்பை மீறி கடந்த 27-ம் தேதி நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய பெட்ரோலிய துறை இணை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்பு 22 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதிர்ச்சி
மத்திய அரசின் இந்த நம்பிக்கை துரோகச் செயலால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் நெடுவாசல் கிராம பொதுமக்கள் மத்திய அரசு இந்த திட்டத்தை மீண்டும் தொடர்ந்தால் மிகப்பெரிய போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர்.
விழிப்புணர்வு
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போராட்ட குழுவினர் நேரில் சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கியும், சுவரொட்டிகள் ஒட்டியும் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
கூட்டம்
இந்நிலையில், போராட்டம் நடத்துவது தொடர்பாக நெடுவாசல் நாடியம்மன் கோயில் திடலில் 100 கிராமங்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு போராட்ட வடிவங்கள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தீர்மானங்கள்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்; கோரிக்கை நிறைவேறும் வரை புதுக்கோட்டை, தஞ்சை ஆட்சியர் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்; 70 கிராமங்களில் உள்ள வீடுகளில் கறுப்புக் கொடி கட்டிப் போராட்டம் நடத்தப்படும்; டெல்லியில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.