தாம்பரம் - செங்கோட்டை இடையே அந்தியோதயா சிறப்பு ரயில் - இன்று முதல் இயக்கம்
தாம்பரம்- செங்கோட்டை இடையேயான சிறப்பு ரயில் சேவை இன்று முதல் தொடங்கியது.
Recommended Video
சென்னை: தாம்பரம்- செங்கோட்டை இடையேயான சிறப்பு ரயில் சேவை இன்று முதல் தொடங்கியது. சேவை தொடங்கிய முதல் நாளே இன்ஜின் கோளாறு ஏற்பட்டதையடுத்து சிறப்பு ரயில் 20 நிமிடங்கள் தாமதமாக சென்றது.
தாம்பரம்-செங்கோட்டை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இன்று முதல் இயக்கப்படுகிறது. மார்ச் 5,7,12,14 ல் தாம்பரத்தில் காலை 7 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம், சிதம்பரம், கும்பகோணம், திருச்சி, காரைக்குடி, மானாமதுரை வழியாக அருப்புக்கோட்டை,விருதுநகர்,சிவகாசி, ராஜபாளையம் வழியாக இரவு 10 மணிக்கு செங்கோட்டைக்கு சென்றடையும்.
மறு மார்க்கமாக மார்ச் 6, 8, 13, 15 ல் செங்கோட்டையில் காலை 6 மணிக்கு புறப்பட்டு ராஜபாளையம்,சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, கும்பகோணம் வழியாக தாம்பரத்திற்கு இரவு 10 மணிக்கு வந்தடைகிறது.
முன்பதிவில்லா ரயிலாக இயங்கும் இது, மார்ச் 15க்கு பின், தாம்பரம்-செங்கோட்டைக்கு அந்தியோதாயா ரயிலாக தினமும் இயக்கப்படுகிறது.
நீண்ட தூரங்களுக்கு முன்பதிவு வசதியில்லாத இந்த அந்தியோதயா ரயில்கள் இயக்கப்படுகின்றன. பல வசதிகளைக் கொண்ட இந்த ரயில் பெட்டியில் பயோ டாய்லெட், ரயிலில் குடிநீர் வசதி, செல்போனை சார்ஜ் செய்யும் வசதி, தீயணைக்கும் கருவிகள் என பல வசதிகளைக் கொண்டுள்ளது. அழகான வடிவமைப்பு கொண்டுள்ளது.
தென்மாவட்டங்களிலிருந்து டெல்டா மாவட்டங்களுக்கு தற்போது செந்தூர் எக்ஸ்பிரஸ் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. சிதம்பரம், கும்பகோணம், திருநள்ளாறு என கோயில் நகரங்களுக்கு செல்லும் பல பயணிகள் செந்தூர் எக்ஸ்பிரசை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வரும் இன்று முதல் அந்தியோதயா ரயில்கள் பகல்நேரங்களில் இயக்கப்பட உள்ளதால் பக்தர்களுக்கும், தென் மாவட்ட மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ரயில், நரிக்குடி, திருச்சுழி, திருத்தங்கல், ஸ்ரீவில்லிபுத்தூர் பாம்புகோயில் சந்தை, கடையநல்லுார் ஸ்டேஷன்களில் நிற்காது. இங்கும் நின்று செல்லவேண்டும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.