யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம்.. ஆனால் எல்லோரும் எம்ஜிஆராக முடியாது.. சொல்கிறார் தம்பிதுரை!
யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் ஆனால் எல்லோரும் எம்ஜிஆராக முடியாது என அதிமுக எம்பி தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
சென்னை யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் ஆனால் எல்லோரும் எம்ஜிஆராக முடியாது என அதிமுக எம்பி தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் அரசியல் கட்சி ஆரம்பிக்க உள்ளனர். இதற்கு மற்ற அரசியல் கட்சிகளிடையே எதிர்ப்பும் வரவேற்பும் ஒருசேர கிளம்பியுள்ளது.
இந்நிலையில் ரஜினி மற்றும் கமல் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை கருத்து தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
எம்ஜிஆர் ஆக முடியாது
அப்போது ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் என்ற அவர், அதற்கு தடை கிடையாது என கூறினார். ஆனால் கட்சி ஆரம்பிக்கும் எல்லாரும் எம்ஜிஆர் ஆக முடியாது என்றும் தம்பிதுரை கூறினார்.
சீர்திருத்த பணியை மேற்கொண்டார்
எம்.ஜி.ஆர் 1953ஆம் ஆண்டு தி.மு.க.,வில் இணைந்த போது, தேர்தலில் போட்டியிடவில்லை என்று கூறிய தம்பிதுரை சமூக சீர்திருத்த பணியை தான் செய்தார் என்றார். 1956ஆம் ஆண்டுதான் எம்ஜிஆர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார் என்றும் தம்பிதுரை கூறினார்.
எம்ஜிஆர் கொள்கை, ஜெ. ஆட்சி
சமூக நீதிக்காக வாழ்ந்தவர் எம்ஜிஆர் என்ற தம்பிதுரை, தற்போது அரசியலுக்கு வருவோர், எதற்காக வருகின்றனர் என தெரியவில்லை என்றும் சாடினார். எம்ஜிஆரின் கொள்கையையும் ஜெயலலிதாவின் ஆட்சியையும் தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்றும தம்பிதுரை கூறினார்.
அதிமுகவுடன் போட்டியிட
அதிமுக ஆட்சி தான் நீடிக்கும் என்ற அவர், நான் யாரையும் குறை சொல்ல தயாராக இல்லை என்றும் கூறினார். அதிமுகவுடன் போட்டியிட, எந்த தேசிய கட்சிகளும் கிடையாது என்றும் தம்பிதுரை தெரிவித்தார்.
நோட்டாவுடன் தான் போட்டி
தேசிய கட்சிகள் 'நோட்டா'வுடன் தான் போட்டியிடுகின்றன என்றும் தம்பிதுரை கூறினார். தமிழகத்தில், திராவிட இயக்கங்கள்- தேசிய கட்சிகள் இடையே, என்றைக்குமே போட்டி கிடையாது என்றும் அவர் கூறினார்.
தமிழகத்தில் இடம் கிடையாது
தேசிய கட்சியான காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்ட முதல் மாநிலம், தமிழகம் தான் என்ற தம்பிதுரை திராவிட பாரம்பரியத்தை யாரும் அழித்துவிட முடியாது என்றார். தேசிய கட்சிகளுக்கு, தமிழகத்தில் இடம் கிடையாது என்றும் தம்பிதுரை கூறினார்.