பிரஸ் மீட்டை நடத்துவது அரசுதான்.. போட்டு உடைத்த லண்டன் டாக்டர்! நடராஜன் அட்மிட் இதற்குத்தானா?
லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே, இந்த பிரஸ் மீட் தமிழக அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதே தவிர, அப்பல்லோவால் கிடையாது என்று போட்டு உடைத்தார்.
சென்னை: அரசுதான் அப்பல்லோ பிரஸ் மீட்டுக்கு ஏற்பாடு செய்தது என்று, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை வழங்கிய டாக்டர் ரிச்சர்ட் பியல் தெரிவித்தார். அதேநேரம், ரிச்சர்ட்டுக்கு சென்னையில் வேலை இருந்ததாகவும் அதனால்தான் அவர் வந்ததாகவும், அப்பல்லோ டாக்டர் தெரிவித்து குழப்பம் ஏற்படுத்தினார்.
ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருக்கும் நிலையில், இன்று அப்பல்லோ மருத்துவமனை சார்பில் டாக்டர்கள் பிரஸ் மீட் செய்தனர். ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியல், டாக்டர் பாலாஜி, டாக்டர் பாபு உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் பேசினர்.
அப்போது ஏன் இவ்வளவு தாமதமாக பிரஸ் மீட் செய்கிறீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பாலாஜி, "டாக்டர் ரிச்சர்ட் இன்று சென்னையில் ஒரு நிகழ்வில் பங்கேற்க வந்தார். அவர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த நிபுணர் என்பதால் அவரும் இருக்கும்போது பிரஸ் மீட் செய்யலாம் என்பதால் இன்று பிரஸ் மீட் செய்கிறோம். அரசு தரப்பில் இருந்து எங்களுக்கு பிரஸ் மீட் செய்ய எந்த அழுத்தமும் வரவில்லை" என்றார்.
அதேநேரம் மற்றொரு கேள்வியின்போது ரிச்சர்ட் பீலே, இந்த பிரஸ் மீட் தமிழக அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதே தவிர, அப்பல்லோவால் கிடையாது என்று போட்டு உடைத்தார்.
சசிகலாவின் கணவர், நடராஜன், நேற்று இரவுதான், இதே அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்த கொதிப்பு இருப்பதாக தகவல்கள் வெளியிடப்பட்டன. ஆனால் பிரஸ் மீட்டில் என்ன பேச வேண்டும் என்று டாக்டர்களுக்கு அவர்தான் கதை தயாரித்து கொடுக்க வாய்ப்புள்ளதாக திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் டிவிட்டில் கூறியுள்ளார். இப்போது, லண்டன் டாக்டரே, இது அரசால் நடத்தப்படும் பிரஸ் மீட் என ஒப்புக்கொண்டது இந்த சந்தேகத்தை உறுதி செய்வதாக உள்ளது.
அதேநேரம், அப்பல்லோ டாக்டர் பாலாஜியோ அரசு தரப்பிலிருந்து அழுத்தம் வரவில்லை என முரண்பட்ட தகவலை தெரிவித்துள்ளதும் கவனிக்கத்தக்கது.