மானிய விலையில் இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம்... தமிழக அரசு
சென்னை: வேலைபார்க்கும், சுயதொழில் செய்யும் பெண்களுக்கான அம்மா இருசக்கர வாகன திட்டத்துக்கு 22-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள், அமைப்பு மற்றும் அமைப்பு சாரா நிறுவனங்களில் பதிவு பெற்ற பெண்கள், வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றுவோர், சுயமாக தொழில் செய்யும் பெண்கள் உள்ளிட்டோருக்கு இந்த திட்டத்தின் கீழ் இருசக்கர வாகனங்களை பெற விண்ணப்பிக்கலாம்.

தமிழக அரசு சார்பில் அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் இருசக்கர வாகனம் பெறுவதற்கான மானியம் அளிக்கப்பட உள்ளது. அதன்படி ரூ.25 ஆயிரம் அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் ஆகியவற்றில் எது குறைவோ அது வழங்கப்படும்.
வாகனத்தை பெற ரிசர்வ் வங்கியால் அதிகாரம் அளிக்கப்பட்ட வங்கிகளிடம் இருந்து கடன் பெறலாம் என்றும், 18 வயது முதல் 40 வயதுவரையில் ஓட்டுனர் உரிமம் வைத்துள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பவரின் ஆண்டு வருமான அளவு இரண்டரை லட்சத்தை தாண்டக்கூடாது என்றும், இந்த திட்டத்தில் மிகவும் பின் தங்கிய பகுதிகள், மலைப்பகுதிகள், கைவிடப்பட்ட பெண்கள், கணவனை இழந்தோர், மாற்றுத்திறனாளிகள், 35 வயதை தாண்டி திருமணமாகாத பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சியர் மற்றும் அரசு அலுவலகங்களில் இதற்கான விண்ணப்பங்கள் இலவசமாக கிடைக்கும் என்றும், வருகிற 22-ந்தேதி முதல் இந்த விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை விண்ணப்பங்கள் அளிக்கப்படும் என்றும், இவற்றை பிப்ரவரி 5-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பவர்கள் வயதுக்கான சான்றிதழ், இருப்பிடச்சான்று, ஓட்டுனர் உரிமம், வருமான சான்றிதழ், வேலையின் தன்மை குறித்த சான்றிதழ், ஆதார் அட்டை, கல்விச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், சாதிசான்றிதழ், ஆகியவற்றை சமர்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications