அரக்கோணம் கடற்படை விமான தளம் தற்காலிக பயணிகள் விமான நிலையமாகிறது
சென்னை: கனமழையினால் சென்னை விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இதனால் அரக்கோணத்தில் உள்ள மத்திய அரசின் ராஜாளி கடற்படை விமான தளம் தற்காலிகமாக பயணிகள் விமான நிலையமாக மாறுகிறது.
வேலூர் மாவட்டம், அரக்கோணத்தில் மத்திய கடற்படையின் பயிற்சித் தளம் உள்ளது. ஆசியாவிலேயே மிகப் பெரிய கடற்படைத்தளமான இங்கு, இந்தியாவிலேயே மிகப் பெரிய ஹெலிகாப்டர் விமானிகள் பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது.

தற்போது சென்னையில் இடைவிடாது கொட்டித் தீர்த்த கன மழையால் சென்னை விமான நிலைய ஓடு பாதையிலும் தண்ணீர் வெள்ளமாக தேங்கியுள்ளது. இதனால் விமான சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டு விமான நிலையம் நேற்று இரவு முதல் மூடப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான பயணிகள் தவித்து வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்திற்கு தரை இறங்குவதற்காக வந்த 15 விமானங்கள் தரை இறங்க முடியாமல் ஹைதராபாத், பெங்களூர் விமான நிலையங்களுக்கு திருப்பிடப்பட்டன. மேலும் விமான நிலையத்திற்குள் விமானம் நிறுத்தப்படும் இடங்களிலும் ஓடு பாதையிலும் வெள்ளமாக தேங்கியிருந்த மழை நீரால் சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.
இந்த நிலையில் சென்னையில் 48 மணிநேரத்துக்கும் மேலாக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து சென்னை விமான நிலையம் சரி செய்யப்படும் வரை பயணிகளின் நலன் கருதி அரக்கோணம் கடற்படை விமான தளத்தை தற்காலிகமாக பயணிகள் விமான நிலையமாக மாற்ற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு மாற்றினால் குறைந்த பட்ச விமான பயணிகளாவது சிரமம் இன்றி வெளியூர் செல்ல வசதியாக இருக்கும்.












Click it and Unblock the Notifications