அரவக்குறிச்சி வேட்பாளர் மீது காய்ச்சிய எண்ணெயை ஊற்றிய மனைவி
கரூர்: அரவக்குறிச்சி சட்டசபை தொகுதியில் போட்டியிடும் பீப்பிள்ஸ் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியின் வேட்பாளர் ராஜேஷ்குமார் மீது அவரது மனைவி காய்ச்சிய எண்ணெய்யை ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அருகே உள்ள அரங்கப்பாளையத்தை சேர்ந்த ராஜேஸ்குமார், பீப்பிள்ஸ் பார்ட்டி ஆப் இந்தியா என்ற கட்சி சார்பில் அரவக்குறிச்சி தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் தற்போது தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கொடைக்கானலை சேர்ந்த ரேவதியை காதல் திருமணம் செய்து கொண்டார். கடந்த சில நாட்களாக கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று முன்தினம் மாலை கணவன்-மனைவி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அதன் பிறகு ராஜேஷ்குமார் வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது ஆத்திரம் அடைந்த ரேவதி சமையல் எண்ணெயை அடுப்பில் வைத்து காய்ச்சி, தூங்கிக்கொண்டிருந்த தனது கணவர் மீது ஊற்றினார்.
பின்னர் ரேவதி அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் வலி தாங்க முடியாமல் ராஜேஷ்குமார் அலறி துடித்தார். அவர் அலறல் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடிவந்து ராஜேஷ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக அரவக்குறிச்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சின்னதாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ரேவதியை வலைவீசி தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications