அதிமுக-திமுக நிர்வாகிகள் திடீர் மோதல்.. அரவக்குறிச்சியல் பரபரப்பு
அரவக்குறிச்சி தேர்தல் வாக்குப் பதிவின் போது திமுக-அதிமுகவினரிடையே ஏற்பட்ட மோதலால் அங்கு பதற்றம் நிலவியது.
அரவக்குறிச்சி: அ.தி.மு.க. நிர்வாகிகளும் அதன் மகளிர் அணியினரும் வாக்களிக்க வரும் பொதுமக்களிடம் இரட்டை இலைக்கு வாக்களிக்குமாறு விதிமீறி ஆதரவு திரட்டியதால் அரவக்குறிச்சி அருகே அ.தி.மு.க- தி.மு.க. வுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. அப்போது, வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். அதில் அந்த தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி ஷாநகர் அரசு மேல் நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் காலையில் இருந்தே வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.

இந்த நிலையில் வாக்குச்சாவடி மையத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் நின்றவாறு அ.தி.மு.க.வை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் அதன் மகளிர் அணியினர் வாக்களிக்க வரும் பொதுமக்களிடம் இரட்டை இலைக்கு வாக்களிக்குமாறு விதிமீறி ஆதரவு திரட்டியதாக கூறப்படுகிறது.
இதற்கு தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால் அ.தி.மு.க.வினருக்கும்- தி.மு.க.வினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு அரவக்குறிச்சி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் கீதாஞ்சலி தலைமையில் போலீசாரும் துணை ராணுவப்படையினர் அங்கு சென்று சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது தி.மு.க.வினர் போலீசாரிடம், விதிமுறைகளை மீறி அ.தி.மு.க.வினர் வாக்குச்சாவடி மையம் அருகே டிஜிட்டல் பேனர்கள் வைத்துள்ளனர். அதனை அகற்ற வேண்டும் என்றனர். இதே போல் அ.தி.மு.க.வினரும் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து பள்ளப்பட்டி பகுதியில் விதி முறைகளை மீறி வைக்கப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட தி.மு.க.-அ.தி.மு.க. டிஜிட்டல் பேனர்களை போலீசார் உடனடியாக அகற்றினர். மேலும் அங்கு நின்றவர்களை கலைந்து போகுமாறு அறிவுறுத்தினர்.
இதனிடையே, டிஜிட்டல் பேனர் அகற்றப்பட்டதை அறிந்த அ..தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் சாகுல் அமீது சம்பவ இடத்திற்கு சென்று தி.மு.க.வினரிடம் தட்டிக்கேட்டார்.
அப்போது, இங்கு நிற்பவர்கள் உள்ளூர்க்காரர்களா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். எனவே, மீண்டும் தி.மு.க.வினருக்கும், அ.தி.மு.க. வினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியது. பின்னர் போலீசார் சென்று மீண்டும் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச் சாவடிக்கு வாக்களிக்க வந்த அனைவரும், அவர்களது வாக்குப்பதிவு முடிந்தவுடன் அங்கிருந்து உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், அப்பகுதியில் கூட்டம் சேரவிடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவியதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications