ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பை வரவேற்கும் தகுதி, இந்தத் தலைவர்களுக்கு உள்ளதா?
இன்று ஜெயலலிதாவுக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை கிடைத்த செய்தி வெளியானதும், சுறுசுறுப்பாக சில தலைவர்கள் அறிக்கை விட ஆரம்பித்தனர்.
வழக்கம் போல நீதி நிலைநாட்டப்பட்டது... சத்தியம் வெல்லும்.. முற்பகல் செய்யின்.. என்ற வார்த்தை ஜாலங்களோடு தீர்ப்பை வரவேற்று சில தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
வேடிக்கை என்ன வென்றால் இவர்கள் அனைவருமே வழக்கு நடைபெற்ற காலத்தில் ஜெயலலிதாவோடு கூட்டணி வைத்து தேர்தலைச் சந்தித்து அவரை வாயாரப் புகழ்ந்தவர்கள், ஜெயலலிதாவை வானளாவ உயர்த்திப் பாராட்டி மேடைகளில் முழங்கியவர்கள்.

வைகோ
1998, 2006, 2009 தேர்தல்களில் ஜெயலலிதாவுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்தவர் வைகோ. அப்போது அவர் ஜெயலலிதாவைப் புகழ்ந்த விதம் பார்த்து அதிமுகவினரே வாயடைத்து நின்றனர். அந்த வைகோதான் இப்போது ஜெயிலலிதாவுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை வரவேற்று, தீர்ப்பளித்த நீதிபதியையும் பாராட்டியுள்ளார்.

ராமதாஸ்
அதிமுக, திமுகவுடன் மாறி மாறி கூட்டணி வைத்த கட்சிதான் பாட்டாளி மக்கள் கட்சி. அவரும் ஜெயலலிதாவைப் பாராட்டிப் பேசியுள்ளார். இந்த வழக்குகள் அனைத்துமே அரசியல் உள்நோக்கம் கொண்டவை என கண்டித்துள்ளார். அவரோ இன்று நீதி நிலை நாட்டப்பட்டது என்று அறிக்கை விடுத்துள்ளார்.

பொன் ராதாகிருஷ்ணன்
ஜெயலலிதாவுடனான கூட்டணிக்காக இன்று வரை ஏங்கிக் கிடக்கும் கட்சிதான் பாஜக. ஏற்கெனவே இரு முறை கூட்டணி வைத்தவர்கள். சொல்லப் போனால் தமிழகத்தில் கால் ஊன்றவே வலுவற்றுக் கிடந்த அக்கட்சிக்கு முதல் முதலில் 4 எம்பிக்களைப் பெற்றுத் தந்தவர் ஜெயலலிதாதான். இன்று அந்தக் கட்சியின் தலைவர்கள் தமிழிசையும், பொன் ராதாகிருஷ்ணனும் விடுத்துள்ள அறிக்கைகளைப் பார்த்தால், அதிமுகவில் உறுப்பினராக இல்லாதவர்கள் கூடத் திட்டிவிடுவார்கள்!

விஜயகாந்த்
ஒற்றை உறுப்பினருடன் இருந்த விஜயகாந்தின் தேமுதிகவுக்கு இந்ததேர்தலில் 27 உறுப்பினர்களைப் பெற்றுத் தந்தது ஜெயலலிதாவுடனான கூட்டணிதான். ஆனால் அவரோ ஜெயலலிதாவுக்குக் கிடைத்த தீர்ப்பு தமிழகத்துக்கு தலை குனிவு என்கிறார்.

கம்யூனிஸ்டுகள்
எந்தத் தேர்தலாக இருந்தாலும் திமுக அல்லது அதிமுகவுடன் ஒட்டிக் கொள்ளும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இந்தத் தீீர்ப்பை வரவேற்று, பொது வாழ்வில் நேர்மை பற்றி பாடம் எடுத்துள்ளன.












Click it and Unblock the Notifications