பேரறிவாளனின் பரோல் நீட்டிப்பு நம்பிக்கை.. அற்புதம்மாள் எதிர்பார்ப்பு பொய்த்தது!
பேரறிவாளனின் பரோல் இன்று மாலைக்குள் நீட்டிக்கப்படும் என நம்பிய அற்புதம்மாளின் எதிர்ப்பார்ப்பு பொய்யாகி போனது. .
வேலூர்: பேரறிவாளனின் பரோல் இன்று மாலைக்குள் நீட்டிக்கப்படும் என நம்பிய அற்புதம்மாளின் எதிர்ப்பார்ப்பு பொய்யாகி போனது. 2 மாத பரோல் முடிந்து பேரறிவாளன் இன்று சிறைக்கு திரும்பினார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன் வேலூர் மத்திய சிறையில் கடந்த 26 ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரது தந்தை குயில்தாசனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அவரை காண கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி பரோலில் பேரறிவாளன் வெளியே வந்தார்.
அவரது பரோல் இன்றுடன் முடிவடைந்தது. இன்று மாலை 5 மணிக்குள் பேரறிவாளன் வேலூர் மத்திய சிறைக்கு செல்ல வேணடும்.
ஆனால் பேரறிவாளனின் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வலியுறுத்தி அற்புதம்மாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் மனு அளித்திருந்தார். அதில் தனது கணவருக்கும் மகளுக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது என்றும் வயது முதிர்வால் தன்னால் அவர்களை கவனிக்க முடியவில்லை என்றும் பேரறிவாளன் உடன் இருந்தால் உதவியாக இருக்கும் என்பதால் அவரது பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அற்புதம்மாள்,
பேரறிவாளனின் தந்தைக்கு உடல் நிலை இன்னும் குணமாகவில்லை என்றார். இதனால் பேரறிவாளனின் பரோலை நீட்டிக்குமாறு முதல்வரிடம் மனு கொடுத்திருப்பதாகவும் இன்று மாலைக்குள் முதல்வரிடம் இருந்து நல்ல செய்தி வரும் என்ற நம்பிக்கையோடு காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
ஆனால் அவரது எதிர்ப்பார்ப்பு பொய்த்துப் போய்விட்டது. பேரறிவாளனின் பரோல் நீட்டிக்கப்படவில்லை. 2 மாத பரோல் முடிந்து பேரறிவாளன் மீண்டும் வேலூர் சிறைக்கு சென்றுவிட்டார்.