பேரறிவாளனின் பரோலை மேலும் 1 மாதம் நீட்டிக்க வேண்டும்.. எடப்பாடியாரிடம் அற்புதம்மாள் மனு!
பேரறிவாளனின் பரோலை நீட்டிக்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை: பேரறிவாளனின் பரோலை மேலும் 30 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் மனு அளித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்தார். இந்நிலையில் பேரறிவாளனின் தந்தை உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவரை பார்ப்பதற்காக கடந்த மாதம் பேரறிவாளன் 30 நாள் பரோலில் வெளி வந்தார். வேலூர் மாவட்டம் வாலாஜாபாத்தில் உள்ள அவரது வீட்டில் பேரறிவாளன் தங்கியுள்ளார்.
இந்நிலையில் பேரறிவாளனின் பரோல் வரும் 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து பேரறிவாளனின் பரோலை மேலும் 30 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் அவரது தாயார் அற்புதம்மாள் மனு அளித்துள்ளார்.
அதில் தனது கணவரும் மகளும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி அதற்கான ஆவணங்களை இணைத்துள்ளார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள அவர்களை வயது முதிர்வு மற்றும் சக்கரை நோய் காரணமாக தன்னால் தனியாக பார்த்துக்கொள்ள முடியவில்லை என தெரிவித்துள்ளார்.
இந்த நேரத்தில் மகன் பேரறிவாளள் உடன் இருந்தால் தனக்கு மனவலிமையை தரும் என்றும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்களை கவனிக்க உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் பேரறிவாளனின் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.