தலித் சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய இளைஞர்: கைது செய்ய வலியுறுத்தல்
மதுரை : மதுரையில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பள்ளி சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி, 6 மாத கர்பிணியாக்கிய இளைஞர் மீது மதுரை மாவட்ட போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்த நபரை கைது செய்ய வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவேண்டும் என்றும் எவிடென்ஸ் அமைப்பைச் சேர்ந்த கதிர் வலியுறுத்தியுள்ளார்.
மதுரை ராஜம்பாடி கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரியான செல்வபிரபு, வடபழஞ்சி அம்பேத்கர் காலனியை சேர்ந்த தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினார் என்பது புகாராகும். தற்போது அந்த சிறுமி 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இச்சம்பவம் தொடர்பாக சிறுமியிடம் பெற்றோர் விசாரித்ததில் அந்த இளைஞர், சுமார் 7 மாதங்களாக மிரட்டி, தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக கூறியுள்ளார்.
நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால், பெற்றோரையும் தம்மையும் கொன்றுவிடுவதாக மிரட்டியதால், தாம் எதுவும் தெரிவிக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட சிறுமி கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக, செல்வபிரபு மீது கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரை பெற்றுக்கொண்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். எனினும், செல்வபிரபுவை கைது செய்வதில் போலீசார் தொடர்ந்து மெத்தனம் காட்டப்படுவதாக சிறுமியின் உறவினர்கள் வேதனை தெரிவித்தனர்.
இதுகுறித்து எவிடென்ஸ் அமைப்பினர் நேரில் விசாரணை செய்தனர். 15 வயது சிறுமி மீது நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமையை மூடி மறைக்கும் வேலையில் போலீஸார் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டும் எவிடென்ஸ் அமைப்பின் கதிர், குற்றவாளி மீது பாலியல் வழக்கே பதிவு செய்யாமல் இருப்பது நியாயமா?' எனவும் கொதிக்கிறார்.
குற்றவாளியை வேண்டும் என்றே தப்ப வைக்கும் முயற்சியில் நாகமலை புதுக்கோட்டை போலீஸார் ஈடுபட்டுள்ளனர் என்றும் குற்றம் சாட்டுகிறார் கதிர்.
சிறுமியுடன் படிக்கும் செல்வபிரபுவின் தங்கைதான் வீட்டுக்கு வரச் சொல்லியிருக்கிறார். அங்கு சென்ற சிறுமியை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்து வந்திருக்கிறார் செல்வபிரபு. இதைப் பற்றி வெளியில் சொல்லக் கூடாது எனக் கடுமையான மிரட்டலுக்கும் ஆளாக்கப்பட்டிருக்கிறார். கடந்த 22ம் தேதி காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளனர். குற்றத்தில் ஈடுபட்ட செல்வபிரபு மீது மிகச் சாதாரண வழக்குகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பாலியல் கொடுமைக்கான சட்டப் பிரிவுகளே முதல் தகவல் அறிக்கையில் இடம் பெறவில்லை. பழைய எஸ்.டி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் சட்டப் பிரிவுகளை நிரப்பியுள்ளனர். 2015 எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் எந்தப் பிரிவுகளும் இடம்பெறவில்லை. போலீசாரிடம் கேட்டால், குற்றவாளியைப் பிடிக்க முடியவில்லை' என அலட்சியமாகப் பதில் சொல்கின்றனர்.
ஒரு சிறுமி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இதுதான் தீர்வா? சிறுமியின் பெற்றோர் விவசாயக் கூலிகளாக வேலை பார்க்கின்றனர். அவர்களால் போலீசாரின் செயல்களுக்கு எதிராகப் போராட முடியவில்லை.
கர்ப்பிணியாக இருக்கும் சிறுமிக்கு மருத்துவ சிகிச்சையும் மனநல ஆலோசனையும் தேவைப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்க வேண்டும் என்றும் கதிர் வலியுறுத்தியுள்ளார்.