மயிலை அறுபத்துமூவர் திருவிழா!... லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் இன்று நடைபெற்ற அறுபத்து மூவர் திருவிழாவிழாவை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளதால் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. அழகான சப்பரத்தில் எழுந்தருளிய 63 நாயன்மார்களுக்கும் வெள்ளிச்சப்பரத்தில் எழுந்தருளி காட்சித்தந்த கபாலீஸ்வரரை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
சிவபெருமானைப் போல தாமும் ஐந்து சிரம் உடையவன் என்று பிரம்மதேவன் கர்வப்படவே இதனைக் கண்டு பிரம்மனின் நடுவில் உள்ள தலையைக் கிள்ளி அதன் கபாலத்தை ஏந்தினார். இதனாலேயே கபாலம் ஏந்திய ஈஸ்வரன் கபாலீஸ்வரன் என அழைக்கப்பட்டதாகவும் அதனால் இது கபாலீசுவரம் எனப் பெயர் பெற்றதாகவும் ஒரு வரலாறு கூறுகிறது.
அன்னை பார்வதி மயில் வடிவம் கொண்டு இறைவனை வழிபட்டது இங்குதான். திருஞான சம்பந்தர் எலும்பாய் இருந்த அங்கம்பூம்பாவையை மீண்டும் பெண்ணாக மாற்றியது இந்த தலத்தில்தான். வாயிலார் நாயனார் வழிபட்டு முக்தி பெற்றதும் இதே மயிலைத் திருத்தலத்தில்தான். இத்தகைய பல்வேறு சிறப்புகள் பெற்ற அருள்மிகு கற்பகாம்பாள் உடனாய கபாலீஸ்வரப் பெருமானுக்கு ஒவ்வொரு வருடமும் நடைபெறும் பங்குனிப் பெருவிழா தனிச்சிறப்பு வாய்ந்தது.

கொடியேற்றம்
கயிலையே மயிலை என்று போற்றப்படும் பெருமைக்குரிய மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் அறுபத்து மூவர் திருவிழா சிறப்பு வாய்ந்தது. இங்கு ஆண்டு தோறும் நடைபெறும் பத்துநாட்கள் பங்குனிப் பெருவிழாவின் கொடியேற்றம் கடந்த 26ஆம் தேதி தொடங்கியது.

பூம்பாவை உயிர்ப்பித்தல்
எட்டாம் நாளான இன்று காலையில் வரலாற்று சிறப்பு மிக்க பூம்பாவை உயிர்ப்பித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. கபாலீஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தில் பதிகம் பாடி பூம்பாவையை உயிர்பித்த பின்னர் மண் குடுவையில் இருந்த சர்க்கரை பிரசாதம் வழங்கப்பட்டது.

அறுபத்து மூவர்
இதைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு அறுபத்து மூவர் புறப்பாடு நடைபெற்றது. இந்தத் திருவிழாவைக் காண லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர். கோலவிழி அம்மன், விநாயகர் உற்சவர்களைத் தொடர்ந்து அறுபத்து மூவர் புறப்பாடு நடைபெற்றது.

கபாலீஸ்வரர் காட்சி
மாடவீதியில் காத்திருந்த அறுபத்து மூவருக்கு வெள்ளித் தேரில் எழுந்தருளிய கபாலீஸ்வரர் காட்சியளித்தார். இந்த நிகழ்வினை கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்.

மாட வீதிகளில் வலம்
தொடர்ந்து 63 நாயன்மார்களுடன் கபாலீஸ்வரர், கற்பகாம்பாள், முருகப்பெருமான், சண்டீகேஸ்வரர், ஆகியோர் நான்கு மாடவீதிகளையும் வலம் வருவது கண்கொள்ளா காட்சியாகும். இது நள்ளிரவு வரை நீளும்.

வயிறு நிறைய அன்னதானம்
அறுபத்து மூவர் விழாவில் பங்கேற்க வரும் பக்தர்களுக்கு வயிறு நிறைய ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்படுவது சிறப்பம்சமாகும். உணவு மட்டுமல்லாது தங்களால் இயன்ற பொருட்களையும் தானம் அளிப்பது இந்த விழாவின் சிறப்பம்சமாகும்.

திருக்கல்யாணம்
பத்தாம் நாள் காலை கபாலீஸ்வரர் தீர்த்தவாரி நடைபெறும். பிறகு மயில் உருவில் புன்னை மரத்தின் அடியில் இருக்கும் பெருமானை வழிபடுவார். பவுர்ணமி தினம் இரவு மயில் உருவம் நீங்கி சிவபெருமானைக் கரம் பிடிப்பார் அன்னை பார்வதி. இந்த நிகழ்வினைக் காணக் கண் கோடி வேண்டும். அம்பாள் திருக்கல்யாணத்தைப் பார்க்கிறவர்களுக்குத் திருமணத் தடை நீங்கி, விரைவில் மாங்கல்ய பாக்கியம் கைகூடும் என்பது நம்பிக்கையாகும்.












Click it and Unblock the Notifications