குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து குறைவு: கலக்கத்தில் வியாபாரிகள்
நெல்லை: குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக உள்ளது. இதனால் வியாபாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.
நெல்லை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்திருந்தது. கடந்த ஐந்து நாட்களாக சாரல் நன்றாக பெய்தது.

குறிப்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு மெயின் அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் குளிக்க தடை விதிக்கும் அளவுக்கு தண்ணீர் ஆர்பரித்து கொட்டியது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது
இந்நிலையில் தற்போது தென்மேற்கு பருவமழையின் அளவு குறைந்துள்ளதால், குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளுக்கு தண்ணீர் வரத்தும் குறைவாக காணப்படுகிறது. மெயின் அருவியில் தண்ணீர் வரத்து குறைந்து விட்ட போதிலும் ஆண்கள், பெண்கள் பகுதியில் தண்ணீர் நன்றாக விழுகிறது.
ஐந்தருவில் தண்ணீர் குறைவாகவே கொட்டுகிறது. இதன் காரணமாக சுற்றுலாப்பயணிகள் வரிசையில் நின்று குளிக்க அனுமதிக்கப் பட்டுள்ளனர். இரவு நேரங்களிலும் சுற்றுலா பயணிகளை அருவிகளில் குளிக்க அனுமதிப்பதால் பாதுகாப்பு வசதிகளை செய்து தரவேண்டும் என்ற குரலும் எழுந்துள்ளது.
விடுமுறை நாட்களில் காலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க மொபைல் போக்குவரத்து போலீசாரையும், கூடுதல் போலீசாரையும் பாதுகாப்புக்கு நிறுத்த வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications