அரக்கோணத்தில் சிக்கிய அஸ்ஸாம் நபர் தீவிரவாதி அல்ல- இரிடியம் கும்பலிடம் ஏமாந்தவர்- போலீசார் தகவல்
வேலூர்: அரக்கோணம் ரயில் நிலையத்தில் 5 கிலோ பாஸ்பரஸுடன் பிடிபட்ட அஸ்ஸாம் நபர் தீவிரவாதி அல்ல என்றும் இரிடியம் இருப்பதாக கூறி ஏமாற்றும் மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்ட நபர் அவர் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
அரக்கோணம் ரயில் நிலையத்தின் 2வது நடைமேடை அருகே மேம்பாலத்தில் ஏறும் படிக்கட்டுகளில் நேற்று மாலை 5.45 மணியளவில் சந்தேகப்படும்படி வேகமாகச் சென்ற நபரை போலீஸார் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த நபரிடம் நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படும் 5 கிலோ பாஸ்பரஸ் மற்றும் மேலும் சில பொருட்கள் இருந்தது கண்டு போலீஸார் திடுக்கிட்டனர்.
இதைத் தொடர்ந்து பிடிபட்ட நபரிடம் துருவி துருவி விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின் போது பிடிபட்ட நபரின் பெயர் மெகிபல்லா என்றும் அஸ்ஸாமை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.
மேலும் ராஜிவ், இஸ்மாயில், டேவிட் ஆகிய 3 பேருடன் இணையம் மூலமாக மெகிபல்லாவுக்கு தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. அந்த 3 பேரும் இரிடியம் தயாரிக்கும் மூலப் பொருட்களை தருகிறோம் என்று கூறி மெகிபல்லாவை ஏமாற்றி அரக்கோணத்துக்கு வரவழைத்திருக்கின்றனர். அங்கு பாஸ்பரஸ் மற்றும் சில பொருட்களை கொடுத்து மெகிபல்லாவை ஏமாற்றியுள்ளனர் என்பதும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து ராஜிவ். இஸ்மாயில், டேவிட் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
எண்ணூரில் மர்ம நபர் கைது
இதனிடையே சென்னை எண்ணூர் துறைமுகத்தில் சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றிய நபர் ஒருவரை கடலோர பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். அவன் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவன் என்றும் அவன் எதற்காக தடை செய்யப்பட்ட பகுதியில் சுற்றி திரிந்து கொண்டிருந்தான் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அவன் கடல்வழியே நீந்தி துறறமுகத்துக்குள் ஊடுருவியதாகவும் தெரியவந்துள்ளது.