தேர்தல் கோதாவில் திமுகவும் குதித்தது.. வேட்பாளர்கள் ஜன.24 முதல் விருப்ப மனுக்கள் வழங்கலாம்
சென்னை: சட்டசபை தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஜனவரி 24ம் தேதி முதல் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல், மே மாதவாக்கில் நடைபெற வாய்ப்புள்ளது. இதற்கான ஆயத்தங்களில் பல கட்சிகளும் இறங்கியுள்ளன.
முதலில் அதிமுகவும், அதைத்தொடர்ந்து பாமகவும், தங்கள் கட்சியின் சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனுக்களை வாங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டன.
இந்நிலையில், திமுகவும் விருப்ப மனுக்களை பெறுவதாக இன்று அறிவித்துள்ளது. இம்மாதம், 24ம் தேதி முதல் அடுத்த மாதம் 4ம் தேதிவரை விருப்ப மனுக்களை தலைமை கழகத்திடம் சமர்ப்பிக்கலாம்.
பொதுதொகுதியில் போட்டியிட விரும்புவோர், தங்கள் விருப்ப மனுக்களுக்கான கட்டணமாக ரூ.25 ஆயிரமும், தனித்தொகுதி மற்றும் பெண்கள் போட்டியிடுவதாக இருப்பின் ரூ.15 ஆயிரமும் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.