அரசு பஸ் ஊழியர்களின் ஸ்டிரைக் எப்போ முடிவுக்கு வரும்.... ஜோதிட ரகசியங்கள்
அரசு பஸ் ஊழியர்களின் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும் என்று ஜோதிட ரீதியாக தெரியவந்துள்ளது.
சென்னை: சந்திரன் காலபுருஷனுக்கு பத்தாம் வீடான மகரத்தை புதன்கிழமை அடையும்போது குருவின் ஐந்தாம் பார்வை பெற்றுவிடுவதால் இந்தபோராட்டம் ஒரு முடிவிற்கு வந்து சகஜநிலை ஏற்படும் என எதிர்பார்க்கலாம். அதற்கேற்ப உயர்நீதிமன்ற மதுரை கிளையும் எஸ்மா சட்டத்தை பிரயோகிக்க உத்தரவிட்டுள்ளது.
அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 13ஆவது ஓய்வூதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் நிலுவைத்தொகையை கணக்கிட்டு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
போக்குவரத்து போராட்டத்திற்கான ஜோதிட காரணங்கள்:
போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் நடைபெறுவதை தொடர்ந்து போராட்டத்திற்கான ஜோதிட ரீதியான கிரக நிலைகளை ஆராய்ந்து பார்த்ததில் போராட்டங்களுக்கான காரக கிரகம் கேது மற்றும் செவ்வாய் என பாரம்பரிய ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
புளுட்டோவும் போராட்டத்திற்க்கு காரக கிரகம் என்கிறது மேற்கத்திய ஜோதிட முறை. கால புருஷ தத்துவபடி பேருந்து மற்றும் பேருந்து ஓட்டுனர்கள் போன்றவர்களுக்கான காரக வீடு மிதுனம் என்றும் காரக கிரகம் புதன் என்றும் பாரம்பரிய ஜோதிட நூல்களும் யுரேனஸ் என்று மேற்கத்திய ஜோதிடமும் தெரிவிக்கிறது.
மேலும் சிறு தூர பயணத்தை குறிப்பது கால புருஷனுக்கு மூன்றாம் வீடான மிதுனம் என்றும் காரக கிரகம் சந்திரன் என்றும் ஜோதிட நூல்கள் கூறுகின்றது.
ஓய்வு ஊதியம் போன்ற ஊழியர்கள் நலம் சார்ந்த விஷயங்களை குறிக்கும் பாவ வீடு காலபுருஷனுக்கு பத்தாம் வீடான மகரம் மற்றும் காரக கிரகம் கர்ம காரகனான சனைஸ்வரர் என்கிறது பாரம்பரிய ஜோதிடம். அதற்கான காரக வீடு சனியோடு நெப்ட்யூனையும் குறிப்பிடுகிறது மேற்கத்திய ஜோதிடம்.
நேற்றைய கிரக நிலையை ஆய்வு செய்தபோது பேருந்தை குறிக்கும் புதன் பகைவனான செவ்வாயின் வீட்டில் யுரேனஸுடன் சேர்ந்து நிற்பதும் கர்மகாரகன் சனி வக்ரம் பெற்று புளுட்டோவுடன் சேர்க்கை பெற்று நிற்பதும் தெரிகிறது. மேலும் போராட்ட கிரகமான கேதுவுடன் நெப்ட்யூன் சேர்க்கை பெற்று நிற்பதும் குறிப்பிடத்தக்கது.
பயணத்தை குறிக்கும் சந்திரபகவான் தேய்பிறை சந்திரனாகி அசுபத்தன்மை அடைந்து நீசமும் பெற்று நிற்கும் போதே அதாவது மே 13 முதல் இதற்கான செய்திகள் காற்றில் பரவ துவங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.
விருச்சிகத்தில் புதனின் நக்ஷத்திரமான கேட்டையில் பயணம் செய்யும்போது போராட்டம் ஆரம்பத்து கேதுவின் நக்ஷத்திரமான மூலத்தை தொடும்போது போராட்டம் வெடித்தது. மேலும் பயண காரகன் சந்திரன் சனி மற்றும் புளுட்டோவிற்கிடையில் பாவகர்த்தாரி பெற்றதும் ஒரு காரணமாகும்
இந்தநிலை இன்று வரை தொடரும் என தெரிகிறது. புதன்கிழமை பயண காரகன் சந்திரன் காலபுருஷனுக்கு பத்தாம் வீடான மகரத்தை அடையும்போது குருவின் ஐந்தாம் பார்வை பெற்றுவிடுவதால் இந்தபோராட்டம் ஒரு முடிவிற்கு வந்து சகஜநிலை ஏற்படும் என எதிர்பார்க்கலாம்.