102 வயதிலும் ஜனநாயக கடமை.. வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து வாக்களித்த முதல்வர் ஸ்டாலினின் தாய்மாமா!
திருவாரூர்: திருவாரூரில் 102 வயதிலும் வாக்குச்சாவடிக்கு வந்து இன்று வாக்களித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாய்மாமா தட்சிணாமூர்த்தி. 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு வீட்டில் இருந்தே தபால் வாக்கு அளிக்கும் வசதி அளிக்கப்பட்டிருந்தாலும், நேரில் வந்து நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட கோயில் திருமாளம் என்ற ஊரில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று வாக்களித்துள்ளார் 102 வயதான தட்சிணாமூர்த்தி.
திருவாரூர் மாவட்டம் பேரளம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாளின் சொந்த ஊர். இங்குதான் முதல்வர் ஸ்டாலின் தாய்மாமன் இருக்கிறார். தயாளு அம்மாளின் அண்ணனான கோ.தட்சிணாமூர்த்தி, தனது சகோதரியின் பிள்ளைகள் அனைவரின் மீதும் மிகுந்த பாசம் கொண்டவர். திருவாரூர் மாவட்ட வேளாண்மை விற்பனைக் குழு தலைவராக இருந்தவர். ஸ்டாலின் சிறு வயதில் சில காலம் தாய்மாமாவின் வீட்டில் வசித்துள்ளார். இதனால், இருவருக்குமான பாசப்பிணைப்பு நெகிழ்ச்சிகரமானது.

தமிழக முதல்வர் ஸ்டாலின், திருவாரூர் மாவட்டத்திற்கு எப்போது சுற்றுப்பயணம் சென்றாலும், அவரது தாய்மாமா தட்சிணாமூர்த்தியைச் சந்தித்து வருவார். தொடர் பணிகள் காரணமாக ஸ்டாலின், அவரது தாய்மாமா வீட்டுக்குச் செல்லவில்லை என்றால் கூட, வயதையும் பொருட்படுத்தாமல் அவரது தாய்மாமா தானே, ஸ்டாலின் இருக்கும் இடத்திற்குச் சென்று பார்த்து பாசத்தோடு விசாரித்துவிட்டு வருவார். அந்தளவுக்கு இருவரின் பாசப் பிணைப்பும் நெருக்கமானது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாய்மாமா தட்சிணாமூர்த்தி, 102 வயதிலும் வாக்குச்சாவடிக்கு வந்து இன்று வாக்களித்துள்ளார். 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு வீட்டில் இருந்தே தபால் வாக்கு அளிக்கும் வசதி அளிக்கப்பட்டிருந்தாலும், நேரில் வந்து நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட கோயில் திருமாளம் என்ற ஊரில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று வாக்களித்து, தனது ஜனநாயகக் கடமையை ஆர்வத்தோடு நிறைவேற்றியுள்ளார் 102 வயதான தட்சிணாமூர்த்தி.
நன்னிலம் சட்டசபை தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக போட்டியிடும் எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை முபாரக் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், "மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மைத்துனர், தமிழக முதல்வர் ஸ்டாலினின் அன்புத் தாய்மாமா, தட்சிணாமூர்த்தி இன்று தனது வயதையும் பாராமல் நேரடியாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்துள்ளார். ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ள அவரைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதுதான் ஜனநாயகத்தின் வெற்றி" எனத் தெரிவித்துள்ளார்.
இன்று மதியம் 3 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 70 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இதுவரை சுமார் 4 கோடி வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி உள்ளனர். 2021 தேர்தலில் 3 மணிக்கு 53.35 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன. அதன்படி 2026 தேர்தலில் கூடுதலாக 3 மணியளவில், 16.65 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications