இரவு பகலாக பணத்தைத் தேடி அலையும் மக்கள்.. செயல்படாத ஏடிஎம்களால் கடும் விரக்தி
ஏடிஎம் மையங்களில் போதிய பணம் இருப்பு இல்லாததால் மக்கள் நேற்று பெரும் அவதிக்குள்ளாகினர். இரவு பகலாக அவர்கள் பணத்தைத் தேடி அலைந்ததைப் பார்க்க முடிந்தது.
சென்னை: தமிழகம் முழுவதும் பெரும்பாலான ஏடிஎம்கள் நேற்று செயல்படவில்லை. வாரக் கடைசி நாள் என்பதாலும், விடுமுறை தினம் என்பதாலும், குறிப்பிட்ட அளவே பணத்தை இருப்பு வைப்பதாலும், பணம் இல்லாமல் பல ஏடிஎம் இயந்திரங்கள் செயல்படவில்லை. இதனால் பணம் எடுப்பதற்காக மக்கள் விடிய விடிய அலையும் அவல நிலை ஏற்பட்டது.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு ஒழிப்பைத் தொடர்ந்து நாடு முழுவதும் பணத்திற்குப் பெரும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. வங்கிகளில் போதிய அளவுக்கு பணம் இருப்பு இல்லை. இதனால் ஏடிஎம்களிலும் பணம் போதவில்லை. இதன் காரணமாக மக்கள் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.
புதிய ரூபாய் நோட்டுக்கள் போதிய அளவில் வங்கிகளுக்கும், ஏடிஎம் இயந்திரங்களுக்கும் அனுப்பி வைக்கப்படாத காரணத்தால் மக்கள் சொல்லொணாத் துயரத்துக்குள்ளாகியுள்ளனர்.
பணத்தை எங்கே தேடுவேன்
பணம் இருக்கும் இடத்தைத் தேடி மக்கள் அலையும் நிலையை ஏற்படுத்தி விட்டனர். கையில் இருக்கும் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற ஒரு கூட்டம் அலைகிறது என்றால், அவசரத் தேவைக்கு ஏடிஎம்களை நோக்கி படையெடுக்கும் கூட்டம் மறுபக்கம்.
வெறும் மெஷின்கள்
ஏடிஎம் மூலமாக தற்போது தினசரி ரூ 2500 (நேற்று மாலை வரை இது ரூ. 2000 மட்டுமே) எடுக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால் அதைக் கூட எடுக்க முடியாத அளவுக்கு பெரும்பாலான ஏடிஎம் இயந்திரங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.
பணம் வரவில்லை
சென்னை முதல் பல்வேறு பகுதிகளிலும் ஏடிஎம் இயந்திரங்களில் அவுட் ஆப் சர்வீஸ் என்று எழுதி வைத்துள்ளனர். காரணம், தேவையான பணம் மெஷின்களுக்கு அனுப்பப்படவில்லை.
அவசர தேவைக்கு கஷ்டம்
இதன் காரணமாக பணம் இருக்கும் இயந்திரங்களைத் தேடி மக்கள் அலையோ அலை என்று அலைந்து கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமையான நேற்று மக்கள் பெரும் தவிப்புக்குள்ளாகி விட்டனர்.
புதிய கரன்சிகள் இல்லை
தற்போது ஏடிஎம் இயந்திரங்களில் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் கிடைப்பதில்லை. வெறும் 50,100தான். ஆனால் அவற்றுக்குப் பற்றாக்குறை இருப்பதால்தான் இந்தப் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பகலில் வங்கிக் கிளைகளில் காத்துக் கிடப்பதும், இரவில் ஏடிஎம்களைத் தேடி அலைவதுமாக மக்கள் பணத்தைத் தேடி அலையும் நிலையில் உள்ளனர்.