பொட்டு சுரேஷ் கொலை.. நாளையுடன் ஓராண்டு நிறைவு.. அட்டாக் பாண்டி இன்னும் தலைமறைவு
மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவராக திகழ்ந்தவர் பொட்டு சுரேஷ். திமுக தலைமக் குழு உறுப்பினராகவும் இருந்தார். இவர் கடந்த ஆண்டு ஜனவரி 31ம் தேதி மதுரையில் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார்.
இந்தக் கொலை வழக்கில் அட்டாக் பாண்டி உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டனர். உடனடியாக அட்டாக் பாண்டி தலைமறைவாகி விட்டார். அட்டாக் பாண்டியும் அழகிரி ஆதரவாளர்தான்.
இந்த வழக்கில் இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் பாண்டி மட்டும் இதுவரை சிக்கவே இல்லை. அவர் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அவரது சொத்துக்களை முடக்கக் கோரி கடந்த டிசம்பர் 11ம் தேதி மதுரை கோர்ட்டில் போலீஸார் மனு செய்தனர். இதையடுத்து 2014 ஜனவரி 22-ந் தேதிக்குள் அட்டாக் பாண்டி போலீசில் சரண் அடைய விட்டால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்படுவார் என்று கோர்ட் உத்தரவிட்டது.
ஆனால் பாண்டி ஆஜராகாததால் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், அவரது சொத்துக்களையும் முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோர்ட் முறைப்படி உத்தரவிட்டதும் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.