பொட்டு சுரேஷ் கொலை: அட்டாக் பாண்டிக்கு ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி
மதுரை: பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள அட்டாக் பாண்டியின் ஜாமீன் மனு 2வது முறையாக தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று உத்தரவிட்டது.
மதுரை, அழகப்பன் நகரைச் சேர்ந்தவர் 'பொட்டு' சுரேஷ், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினராக இருந்தார். மத்திய அமைச்சராகவும், திமுக தென் மண்டல அமைப்புச் செயலராகவும் இருந்த மு.க. அழகிரிக்கு நெருக்கமாக இருந்த இவரை கடந்த 2013 ஜனவரி 31ம் தேதி டி.வி.எஸ். நகரில் மர்மக் கும்பல் ஒன்று வெட்டிக் கொலை செய்தது.

இதுகுறித்து சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப் பதிந்து, திமுக பிரமுகரும், அழகிரியின் மற்றொரு தீவிர ஆதரவாளருமான 'அட்டாக்' பாண்டி உள்ளிட்ட 14 பேரைத் தேடினர். இவர்களில் 7 பேர் வெவ்வேறு நீதிமன்றங்களில் சரணடைந்தனர். மேலும் 6 பேரை போலீசார் கைது செய்தனர். முதல் குற்றவாளியாக கருதப்பட்ட அட்டாக் பாண்டி மட்டும் தலைமறைவானார்.
இதையடுத்து தலைமறைவான அட்டாக் பாண்டியை காவல்துறை கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கைது செய்தது. கைது செய்யப்பட்ட அட்டாக் பாண்டி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். இதுதொடர்பாக தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் 2வது முறையாக மனு தாக்கல் செய்தார்.
அதில், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை பொட்டு சுரேஷ் செய்து வந்தார். இதனால் அவருக்கு தனித் தனி எதிரிகள் உள்ளனர். அவரது கொலைக்கும், எனக்கும் சம்பந்தம் இல்லை. இந்த வழக்கில் போலீசார் என்னை பொய்யாக சேர்த்துள்ளனர். எனவே எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனு நீதிபதி கே. கல்யாணசுந்தரம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில் அட்டாக் பாண்டியின் 2வது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னதாக இதே வழக்கில் அட்டாக் பாண்டி தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு கடந்த ஜூலை-21ஆம் தேதி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையால் தள்ளுபடி செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications