ஆடி கார் ஐஸ்வர்யாவிற்கு ஜாமீன் மறுப்பு- மனுவை தள்ளுபடி செய்த செசன்ஸ் கோர்ட்
சென்னை: சென்னை தரமணியில், கார் மோதி தொழிலாளி மரணமடைந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஐஸ்வர்யாவின் ஜாமீன் மனுவை சென்னை மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2ம் தேதி சனிக்கிழமையன்று தரமணி அருகே மது போதையில் காரை ஓட்டி வந்த ஐஸ்வர்யா, தொழிலாளி ஒருவர் மீது ஏற்றி விபத்துக்குள்ளாகினார். இந்த விபத்தில் முனுசாமி என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஐஸ்வர்யா மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டார். அப்போது அவர் மது அருந்தியது உறுதிப்படுத்தப்பட்டது. பின்னர் அவர் புழல் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரடியாக மனு செய்தார் ஐஸ்வர்யா. ஆனால் எடுத்த எடுப்பிலேயே அதைத் தள்ளுபடி செய்து விட்டது உயர்நீதிமன்றம். செஷன்ஸ் கோர்ட்டுக்குப் போகுமாறு அது உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த வாரம் செஷன்ஸ் கோர்ட்டில் ஐஸ்வர்யா சார்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், இந்த விபத்துக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் குடிபோதையில் காரை ஓட்டவில்லை. இந்த விஷயத்தை ஊடகங்கள் பெரியதாக்கியதால், குடிபோதையில் வாகனத்தை ஓட்டியதாக என் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நான் கணித பாடத்தில் மாநில அளவில் முதல் இடம் பெற்றவள். எனக்கு இன்னும் திருமணமாகவில்லை. தேவையில்லாமல் இந்த வழக்கில் சிறையில் இருந்து வருகிறேன். எனக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்று கூறியுள்ளார் ஐஸ்வர்யா. இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் கடந்த 7ம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு வழக்கறிஞர் ஆஜராகி, மனுதாரர் குடிபோதையில் இருந்தாரா? என்பதை உறுதி செய்யும் விதமாக அவரது ரத்தம் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த ஆய்வு அறிக்கை இன்னும் வரவில்லை. எனவே, மனு மீதான விசாரணையை தள்ளி வைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதையடுத்து வழக்கு விசாரணை 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. நேற்று ஜாமீன் மனு விசாரணைக்கு வந்த போது நீதிபதி விசாரணையை இன்று வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று எடுத்துகொள்ளப்பட்டது. ஐஸ்வர்யாவின் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ஐஸ்வர்யாவின் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் செசன்ஸ் நீதிமன்றமும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications