குடும்பம் நடத்த வர மறுத்த மனைவி... மகன், மகளை எரித்துக் கொன்று ஆட்டோ டிரைவர் தற்கொலை
சென்னை: குடும்பம் நடத்த மனைவி வர மறுத்ததால் ஆத்திரமடைந்த ஆட்டோ டிரைவர், சொந்த மகன், மகளை எரித்துக்கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சீபுரம் மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் கொல்லைமேட்டு தெருவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சம்பத் (40). இவரது மனைவி செல்வி (35). இவர்களுக்கு கார்த்திக் (11), நந்திதா (10) என இரண்டு குழந்தைகள்.
வீட்டின் கீழ்தளத்தில் சம்பத்தும், மேல்தளத்தில் உள்ள கூரை வீட்டில் சம்பத்தின் தந்தை கன்னியப்பனும் வசித்து வந்தனர். செல்விக்கு சிங்கப்பெருமாள் கோவிலில் வசிக்க பிடிக்கவில்லை. எனவே, செங்குன்றத்தில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்று வாழ சம்பத்தை தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.

ஆனால் தனது தந்தை, தாயுடன் இருக்கவே சம்பத் விரும்பியதாக தெரிகிறது. இருப்பினும் மனைவியின் வற்புறுத்தலால் கடந்த வாரம் செங்குன்றத்தில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றார். ஆனால், அங்கு வாழ சம்பத்திற்குப் பிடிக்கவில்லை.
இதனால் மீண்டும் சிங்கபெருமாள் கோவிலுக்கே சென்று வாழலாம் என மனைவியை சம்பத் அழைத்துள்ளார். ஆனால், அதற்கு செல்வி மறுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சம்பத், நேற்று முன்தினம் இரவு செங்குன்றத்தில் டியூசனுக்கு சென்ற மகனையும், மகளையும் அழைத்துக்கொண்டு சிங்கப்பெருமாள் கோவிலுக்கு சென்று விட்டார்.
அங்கு தனது குழந்தைகளுக்கு பிரியாணி வாங்கிக்கொடுத்த சம்பத், பின்னர் குழந்தைகளை தூங்க வைத்துள்ளார். மனைவி தன்னுடன் வாழ வர மறுத்ததால், சோகத்தில் இருந்த சம்பத் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார்.
அதனைத் தொடர்ந்து அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்த குழந்தைகள் மீதும், தனது உடல் மீதும் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்தார்.
3 பேரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், வீடு முழுவதும் ஒரே புகைமூட்டமாக இருந்ததால், கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கே 3 பேரும் தீயில் கருகிய நிலையில் கிடந்தனர். இதில் சிறுவன் கார்த்திக் மட்டும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட சம்பத் மற்றும் நந்திகாவை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த மறைமலைநகர் போலீசார், சம்பத்தின் மனைவி செல்வியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்பத்தகராறு காரணமாக தந்தையே தனது இரு குழந்தைகளைக் கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications