கருணாநிதி ஓய்வில் இருக்கிறார்... பார்க்க வருவதை திமுகவினர் தவிர்க்க வேண்டுகோள்
திமுக தலைவர் கருணாநிதி ஓய்வெடுத்து வருவதால் திமுகவினர் அவரை பார்க்க வருவதை தவிர்க்க வேண்டும் என்று திமுக சார்பில் வேண்டுகோள்விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி சென்னையில் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற வீடு திரும்பியுள்ளார். அவர் ஓய்வெடுத்து வருவதால் திமுகவினர் நேரில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று திமுக செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 1ம் தேதி, நீர்ச்சத்துக் குறைபாடு காரணமாக உடல் நலமின்றி சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு பின்னர் உடல் நலம் பெற்று நேற்று இரவு வீடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில், கருணாநிதி முழு ஓய்வு எடுத்து வருவதால் அவரை சந்திக்க திமுகவினர் வீட்டிற்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று திமுக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிக்கையில், நேற்றைய தினம் (7-12-2016) இல்லம் திரும்பியுள்ள போதிலும், தலைவர் கலைஞர் மேலும் சில நாட்களுக்கு ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும். அதுவரை "நோய்த்தொற்று"க்கு ஆளாகாமல் மிகவும் எச்சரிக்கையோடும், கவனத்தோடும் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். எனவே, கலைஞரைப் பார்க்க நேரில் வருவதைத் தவிர்த்து கழகத் தோழர்களும், நண்பர்களும் முழுமையாகவும், கண்டிப்பாகவும் ஒத்துழைக்க வேண்டுமென்று அன்பு கூர்ந்து கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.