ஆவின் பால் கலப்பட வழக்கு – வைத்தியநாதன் ஜாமீன் மனு தள்ளுபடி
ஆவின்பால் முறைகேடு மற்றும் கலப்பட வழக்கில் கடந்த 18 ஆம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் வைத்தியநாதன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். பாலில் கலப்படம் செய்தே பல கோடி அளவுக்கு சம்பாதித்தவர் வைத்தியநாதன் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகியது.
அவருடைய காவல் டிசம்பர் 8 ஆம் தேதிக்கு ஏற்கனவே நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜாமீன் கோரி மனு செய்திருந்தார் வைத்தியநாதன். அதற்கு சிபிசிஐடி போலீஸார் ஆட்சேபனை தெரிவித்து மனு செய்திருந்தனர்.
இந்த நிலையில் வைத்தியநாதனின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று காலை விழுப்புரம் அமர்வு முன்னர் வந்தது. அப்போது, இம்மனு மீதான விசாரணையை பிற்பகல் 4 மணி வரை ஒத்திவைத்து விழுப்புரம் மாவட்ட நீதிபதி சரோஜினி உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி நடைபெற்ற விசாரணைக்குப் பின்னர் வைத்தியநாதன் உள்ளிட்ட 8 பேரின் மனுவையும் நீதிபதி சரோஜினி தேவி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.