அழகிரி விவகாரத்தில் செப்டம்பர் 30ம் தேதி நடக்கப் போவது என்ன?
நாமக்கல்: தி.மு.க.வில் ஏற்படபோகும் மாற்றங்கள் பற்றி தி.மு.க.வினரிடம் தான் கேட்க வேண்டும் எனத் தெரிவித்த மு.க.அழகிரி, எனது பிரச்னையில் நல்ல முடிவு கிடைக்க அனைவரும் வரும் செப்டம்பர் 30ம் தேதி வரை பொறுத்திருக்க வேண்டும் வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் சர்க்கரை ஆலையில் உள்ள அண்ணா கலையரங்கில் தி.மு.க. பிரமுகரும், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் தீவிர ஆதரவாளருமான முருகேசன் இல்ல திருமணம் இன்று காலை நடந்தது. இதில் முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக தலைவர் கருணாநிதியின் மகனுமான மு.க. அழகிரி கலந்து கொண்டார்.
மணமக்களை வாழ்த்திய அழகிரி, ‘முருகேசன் தி.மு.க.வில் தீவிரமாக பணியாற்றினார். அவரது இல்லத் திருமணத்தில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்' எனத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார் அழகிரி. அப்போது, கருணாநிதி தனது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் விரைவில் திமுகவில் மாற்றங்கள் வரும் என அறிவித்தது குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு அழகிரி, ‘இந்தக் கேள்வியை நீங்கள் தி.மு.க.வினரிடம் தான் கேட்க வேண்டும்' எனப் பதிலளித்தார்.
அதனைத் தொடர்ந்து, ‘உங்கள் பிரச்சினையில் நல்ல முடிவு கிடைக்குமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, ‘நல்ல முடிவு கிடைக்க செப்டம்பர் 30ம் தேதி வரை பொறுத்திருக்க வேண்டும்' எனப் பதிலளித்தார் அழகிரி.
இத்திருமண விழாவில் மு.க.அழகிரியுடன் கே.பி.ராமலிங்கம் எம்.பி, மோகனூர் முன்னாள் சேர்மன் நவலடி உள்பட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.