வேலை கிடைக்க மாட்டேங்குதே: கவலையில் பி.எஸ்.சி. பட்டதாரி பெண் தீக்குளித்து தற்கொலை
சென்னை: குரோம்பேட்டையைச் சேர்ந்த பி.எஸ்.சி. பட்டதாரி பெண் ஒருவர் வேலை கிடைக்காத விரக்தியில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சென்னையை அடுத்து உள்ள குரோம்பேட்டையில் இருக்கும் மும்மூர்த்தி நகர் 5வது குறுக்குத் தெருவில் வசித்து வரும் ஜெயலாபதியின் மகள் அஞ்சலி(20). பி.எஸ்.சி. படித்துள்ள அவர் தாம்பரம் சானிடோரியம் ஏற்றுமதி வளாகத்தில் இருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் 3 மாதம் வேலை பார்த்துள்ளார்.
இந்நிலையில் அவர் அந்த வேலையை விட்டுவிட்டு வேறு வேலை தேடியுள்ளார். பல இடங்களில் நேர்முகக்காணலுக்கு சென்றும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. வேலை கிடைக்காததால் அவர் மனமுடைந்து சோகமாக இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அஞ்சலி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அந்நேரம் அவர் வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். வீட்டில் இருந்து புகை வந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து கதவை உடைத்து பார்த்தபோது அஞ்சலி தீயில் கருகி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
உடனே அவரை ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.