பாரதிராஜாவை எப்படியெல்லாம் ஏமாற்றினேன் தெரியுமா? - பாக்யராஜ் சொன்ன சுவாரஸ்யம்
இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்தபோது அவரை எப்படியெல்லாம் ஏமாற்றினேன் என்று சுவாரஸ்யமான சம்பவங்களை ஒரு பட விழாவில் பாக்யராஜ் பகிர்ந்து கொண்டார்.
இயக்குநர் கே.பாக்யராஜ் உதவியாளராக இருந்த கருப்பையா முருகன் தயாரித்து இயக்கி இருக்கும் படம் ‘யானை மேல் குதிரை சவாரி'. இந்த படத்தில் அர்ச்சனா சிங், நான் கடவுள் ராஜேந்திரன், லொள்ளுசபா சாமிநாதன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இமாலயன் இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

விழாவில் கலந்து கொண்ட பாக்யராஜ் பேசுகையில், 16 வயதினிலே' படப்பிடிப்பு நடந்த போது டைரக்டர் பாரதிராஜாவுக்கு நான் உதவியாளராக இருந்தேன். அப்போது அவர் என்னிடம் ‘கிளாப்' அடிக்கச் சொன்னார். எனக்கு அது பிடிக்கல.
ஒருவாட்டி ‘கிளாப்' அடித்தால் அந்த கட்டையை கையிலேயே தூக்கிக் கொண்டே அலைய வேண்டும். நடிகர், நடிகைகளுக்கு வசனம் சொல்லிக் கொடுப்பது போன்ற அடுத்த கட்ட வேலையை செய்ய முடியாது. எனவே கிளாப் அடிப்பதில் இருந்து தப்புவதற்கு முடிவு செய்தேன். இதனால் அடுத்து நான் கிளாப் அடிக்க வேண்டியது இருந்த போது, சீன் நம்பரை சரியாக சொல்ல முடியாதது போல உளறினேன்.
உடனே டைரக்டர் பாரதிராஜா, ‘என்னய்யா நீ, உனக்கு கிளாப் கூட அடிக்கத் தெரியல என்று கூறி, கிளாப் கட்டையை அருகில் நின்ற பெயிண்டர் சேகர் என்பவரிடம் கொடுக்கச் சொன்னார். அவர் ஸ்டைலாக கிளாப் அடித்தார். நான் நழுவினேன். இப்படியெல்லாம் ஏமாற்றியது இப்போது நினைவுக்கு வருகிறது.
அதே போல் இந்த படத்தை இயக்கிய கருப்பையா முருகன் என்னுடைய பத்திரிகை அலுவலகத்தில் வேலை செய்தவர். அங்கிருந்து கொண்டே என்னை ஏமாற்றி சினிமாவுக்கும் எனக்கு தெரியாமல் முயற்சி செய்திருக்கிறார்.
என்னிடம் உதவியாளராக இருந்த பாண்டியராஜனும் தந்திரமாக நடந்து கொள்வார். எப்படியோ எனது உதவியாளர்கள் எல்லோரும் நன்றாக வளர்ந்திருக்கிறார்கள். இந்த படம் நன்றாக வந்திருக்கும் என்று நம்புகிறேன். வெற்றி பெற வாழ்த்துக்கள்,'' என்றார்.












Click it and Unblock the Notifications