சத்யராஜ் எதிர்ப்பு பின்னணியில் அரசியல் உள்நோக்கம் உள்ளது.. எஸ்.வி.சேகர் விளாசல்
சத்யராஜ் தொடக்கம் முதலே தன்னை தமிழர், தமிழ் நடிகர் என அடையாளம் காட்டிக்கொண்டவர். எனவே அவரை எதிர்க்கிறார்கள் என எஸ்.வி.சேகர் தெரிவித்தார்.
சென்னை: சத்யராஜுக்கு கர்நாடகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளதில் அரசியல் உள்நோக்கம் உள்ளதாக நடிகர் எஸ்.வி.சேகர் சாடியுள்ளார்.
காவிரி விவகாரத்தில் கன்னடர்கள் குறித்து பேசியதற்கு கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், சத்யராஜ் இன்று மன்னிப்பு கேட்டார்.
இதுகுறித்து பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் கருத்து தெரிவித்துள்ளார். அதில் சத்யராஜின் அறிவிப்பை வரவேற்றுள்ளார். அதேசமயம், கர்நாடக அரசியலின்வாதிகளின் எதிர்ப்பைக் கண்டித்துள்ளார். இதுகுறித்து சேகர் கூறியுள்ளதாவது:

சத்யராஜ் பெருந்தன்மை
சத்யராஜ் மிகவும் பெருந்தன்மையானவர். காவிரியில் கர்நாடகா தண்ணீர் விடவில்லை என்றால், விடவில்லை என்றுதான் நாம் கூற முடியும். நிறைய தண்ணீர் வந்துவிட்டது, வயிறு நிரம்பி விட்டது என்றா கூற முடியும்?

சுப்ரீம் கோர்ட்டை மதிக்காத கர்நாடகா
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை கர்நாடகா மதிக்கவில்லை என்றால் மதிக்கவில்லை என்றுதான் கூற முடியும். அரசியல்வாதிகள் அரை மணி நேரத்திற்கு ஒருமுறை எத்தனையோ கருத்துக்களை மாற்றிக்கொள்கிறார்கள். ஆனால் நடிகர் என்பதற்காக சத்யராஜ் குறி வைக்கப்படுகிறார்.

உள்நோக்கம் உள்ளது
9 வருடம் முன்பு சத்யராஜ் பேசிய பேச்சுக்கு பாகுபலி ரிலீஸ் நேரத்தில் எதிர்ப்பு தெரிவிப்பது 100 சதவீதம் அரசியல் உள்நோக்கம் கொண்ட அரசியலாக பார்க்கிறேன்.

கர்நாடகம் யோசிக்க வேண்டும்
நமது ஊரிலிருந்து மணல் செல்லாவிட்டால் கர்நாடகாவில் கட்டுமான தொழில் ஸ்தம்பித்துவிடும். தமிழ் ஐடி ஊழியர்கள் பெங்களூரை விட்டு கிளம்பினால் என்னவாகும் என்பதையெல்லாம் கர்நாடகா யோசித்து பார்க்க வேண்டும்.

தமிழர் என்றால் எதிர்ப்பதா
சத்யராஜ் தொடக்கம் முதலே தன்னை தமிழர், தமிழ் நடிகர் என அடையாளம் காட்டிக்கொண்டவர். எனவே அவரை எதிர்க்கிறார்கள். வேறு சில நடிகர்கள் கர்நாடகா சென்றால் தன்னை கன்னடன் என்றும், ஆந்திரா போனால் தெலுங்கன் என்றும் பேசி தப்பிவிடுவார்கள். இவ்வாறு எஸ்.வி.சேகர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications