டிராபிக் ராமசாமிக்கு ஜாமீன்... வழங்கியது எழும்பூர் கோர்ட்!
சென்னை: தாக்குதல் மற்றும் கொலை மிரட்டல் விடுத்ததாக தொடரபட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமிக்கு ஜாமீன் வழங்கி சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த வாரம் டாக்டர் அழகப்பா சாலையில் அனுமதியின்றி பேனர் வைக்கப்பட்டிருப்பது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு சாலையில் நின்றவாறு டிராபிக் ராமசாமி பேட்டி அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும் அதனைத் தட்டிக் கேட்ட வீரமணி என்பவரைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாகவும் டிராபிக் ராமசாமி மீது வேப்பேரி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரின் அடிப்படையில் கடந்த வியாழனன்று அதிகாலை டிராபிக் ராமசாமியை போலீசார் கைது செய்தனர். டிராபிக் ராமசாமி மீது கொலை மிரட்டல், அவதூறாக பேசுதல், காரை உடைத்தல் உள்ளிட்ட 4 சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சைதாப்பேட்டையில் உள்ள எழும்பூர் 14 ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறைக்குக் கொண்டு சென்றனர்.
ஆனால் கைது செய்யப்பட்ட டிராபிக் ராமசாமிக்கு உடல்நிலை சரியில்லாததால், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக டிராபிக் ராமசாமியும் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரிலும் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால், வழக்கில் அடையாளம் தெரியாத நபரே, டிராபிக் ராமசாமியிடம் தகராறு செய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், வேப்பேரி டாக்டர் அழகப்பா சாலையில் அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் வைத்தவர்கள் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், டிராபிக் ராமசாமி, ஜாமீன் கேட்டு சென்னை எழும்பூர் முதன்மை பெருநகர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி, வாரம் ஒருமுறை நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதித்து, அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications