திரும்பிய பக்கம் எல்லாம் ஆடுகள்.. ராணிப்பேட்டையில் ரூ4 கோடிக்கு விற்பனை! களை கட்டும் பக்ரீத் பண்டிகை
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை நகராட்சி மையத்தில் இன்று ஆடு விற்பனை நடந்தது. காலை 5 மணிக்கு சந்தை கூடியதில் இருந்தே ஆடு விற்பனை விறுவிறுப்பாக இருந்தது. இன்று மதியத்திற்குள் மட்டும் ரூ.4 கோடிக்கு மேலாக ஆடு விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இறைத்தூதர்களில் ஒருவரான இப்ராஹீம் நபி இறைவனுக்காக ஆட்டை பலிகொடுத்ததன் தொடர்ச்சியாக அந்த நடைமுறையை காலம் காலமாக இஸ்லாமியர்கள் பின்பற்றி வருகிறார்கள். பக்ரீத் பண்டிகை மற்றும் அதற்கு அடுத்த நாள் என இரண்டு நாட்களும் ஆடுகள் அறுக்கப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் இறைச்சி உற்றார் உறவினர் ஏழை எளியோருக்கு பகிர்ந்தளிக்கப்படும்.

இதனால் பக்ரீத் பண்டிகை என்றாலே ஆடுகள் விற்பன களை கட்டும். அந்த வகையில் தான் நடப்பு ஆண்டு வரும் 17 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழ் நாடு முழுவதும் கால் நடை சந்தைகளில் ஆடு விற்பனை களை கட்டியுள்ளது. ஆடு வளர்ப்பவர்களும் ஆட்டு வியாபாரிகளும் சந்தைகளில் குவிந்துள்ளனர்.
இதனால் கோடிக்கணக்கில் ஆடு விற்பனை நடைபெறுகிறது. ஆடுகளை வாங்க இஸ்லாமியர்களும் சந்தையில் குவிந்து வருகிறார்கள். ஆட்டின் எடைக்கு தகுந்தபடி விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒரு ஆட்டின் விலை ரூ. 15 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ராணிப்பேட்டை நகராட்சி மைதானத்தில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் சந்தை கூடும்.
அந்த வகையில் இன்று கூடிய சந்தையில் ஆடு விற்பனை களை கட்டியது. திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர் மட்டும் இல்லாமல் ஆந்திராவில் இருந்தும் ஆடுகள் கொண்டு வரப்பட்டன. காலை 5 மணிக்கு சந்தை கூடியதில் இருந்தே ஆடு விற்பனை விறுவிறுப்பாக இருந்தது. எடைக்கு ஏற்றபடி ஆடுகளை விலை கொடுத்து வாங்கி வந்தனர்.
இன்று மதியத்திற்குள் மட்டும் ரூ.4 கோடிக்கு மேலாக விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் இந்த தொகை அதிகரிக்கும் என்று வியாபாரிகள் கூறினர். பக்ரீத் பண்டிகையை ஒட்டி ஒரு கிலோ ஆட்டுக்கறியின் விலையும் உயர்ந்துள்ளது. கடந்த வாரத்தில் ரூ.700 க்கு விற்பனையாகி வந்த ஆட்டுக்கறி தற்போது 1,500 முதல் ரூ. 2 ஆயிரம் வரையில் விற்பனையாகி வருகிறது.












Click it and Unblock the Notifications