மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை - இன்று முதல் அமல்
மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல விதிக்கப்பட்டுள்ள தடை இன்று முதல் அமலாகிறது. செல்போன்களை பராமரிக்க கோவில் வளாகத்தில் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த 2ஆம் தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 35க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமாகின. 500க்கும் மேற்பட்ட கோயில் புறாக்கள் பரிதாபமாக தீயில் கருகின.
இதனையடுத்து பக்தர்களின் நலனை பாதுகாக்க மீனாட்சி அம்மன் கோயிலுக்கு உரிய பாதுகாப்பு வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு வழிகாட்டி ஏற்படுத்தி அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு கடந்த பிப்ரவரி 9ஆம் தேதியன்று நீதிபதிகள் கிருபாகரன், தாரணி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மீனாட்சி அம்மன் கோயிலின் பாதுகாப்பு நலன் கருதி கோயிலுக்குள் அரசு அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் தவிர பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதித்தனர்.
இதுதவிர, கோயிலின் உறுதித்தன்மை குறித்து குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். கோயிலில் தீ அணைப்புக் கருவிகள் எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அந்தக் கருவிகளை கையாக்வது குறித்து கோயில் பணியாளர்களுக்கு முறையான பயிற்சி வழங்கியிருக்க வேண்டும். மின் கசிவு காரணமாக இரண்டு முறை தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் கோயிலின் மின் இணைப்பையும் மாற்றி அமைக்க வேண்டும்.
மீனாட்சி அம்மன் கோயிலின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிக்காக தொல்லியல் நிபுணர்கள் அடங்கிய உயர் மட்ட குழு அமைப்பது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். கோயிலின் பாதுகாப்புக்கு மத்திய தொழிற்பாதுகாப்பு படையினரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த நிலையில் மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் மார்ச் 3 முதல் செல்போன் கொண்டு செல்ல தடைவிதிக்கப்படுகிறது என கோயில் நிர்வாகம் தெரிவித்தது. நீதிமன்ற உத்தரவுப்படியும், பாதுகாப்பு கருதியும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதன்படி மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல பக்தர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது. மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்கள் கொண்டுவரும் செல்போனை பாதுகாக்க மையம் திறக்கப்பட்டுள்ளது. கோயிலின் வடக்கு மற்றும் மேற்கு கோபுரத்தில் 1000 செல்போன்களை பாதுக்காக்க வசதி செய்யப்பட்டுள்ளது. செல்போனை பாதுகாக்க நபர் ஒருவருக்கு ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் திருப்பதி வெங்கடாசலபதி ஆலயத்திற்குள் பக்தர்கள் செல்போன்களை கொண்டு செல்ல பல ஆண்டுகளாகவே தடை உள்ளது. ஆந்திராவில் பல கோவில்களில் செல்போன்களை கொண்டு செல்ல தடை உள்ளது. இதே போல தமிழகத்தில் பாரம்பரியம் மிக்க கோவில்களுக்குள் செல்போன்களை கொண்டு செல்ல அனுமதிக்கக் கூடாது என்ற கோரிக்கை எழுந்துள்ளது.