காவிரிக்காக பந்த்.. டெல்டா மாவட்டங்களில் முழு வெற்றி.. இயல்பு நிலை ஸ்தம்பித்தது
திருவாரூர்: காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டம் காவிரி நதி நீர் பாயும் டெல்டா மாவட்டங்களில் 100 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது.
இந்த முழு அடைப்பு காரணமாக காவிரி டெல்டா பாசன மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருச்சி, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 6,000 வணிகக் கடைகள் மூடப்பட்டன.
மேலும் திருவாரூரில் தனியார் பள்ளிகள் எதுவும் திறக்கப்படவில்லை. ஆட்டோக்கள், தனியார் வாகனங்கள் எதுவும் இயக்கப்படவில்லை. இதனால் அங்கு இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழக முழுவதும் நடைபெற்று வரும் இந்த முழு அடைப்பு போராட்டத்தில் முன்னிலை வகித்து போராட்டம் நடத்திய தலைவர்கள் மு.க. ஸ்டாலின், கனிமொழி, திருமாவளவன், பி.ஆர்.பாண்டியன், வேல்முருகன், வைகோ, கே.என்.நேரு, சி. மகேந்திரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.