மசினகுடி காட்டுக்குள் ராத்திரி நேரம் மனைவி, சகோதரியோடு சிக்கிய தொழிலதிபர்.. குமுறல் புகார்
ஊட்டி: நீலகிரி மாவட்டம் மசினக்குடியில் காட்டுக்குள் இருக்கும் மிருகங்களை விட இவர்களிடம் சிக்கினால் அவ்வளவுதான் என தொழிலதிபர் ஒருவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை பார்க்க விரும்பும் பலர், அதை சுற்றியுள்ள முதுமலை மற்றும் மசினக்குடி செல்வதற்கு தவறுவதில்லை. மசினக்குடியில் நிறைய கும்கி யானைகள் உள்ளன.
இவற்றை பார்ப்பதற்காகவும் இங்கு நிறைய ரிசார்டுகளும் உள்ளன. இங்கு தங்கியிருந்து முதுமலைக்கு சென்று புலிகள் சரணாலயத்திற்கு செல்கிறார்கள். மசினக்குடிக்கு செல்ல ஊட்டியிலிருந்து கூடலூருக்கு செல்ல வேண்டும். அங்கிருந்து மசினக்குடிக்கு செல்லலாம். வசீகரமாக தோற்றமளிக்கும்.

இந்த காடுகளை சுற்றி பார்க்கும் போது லவங்கப்பட்டை, மிளகு, ரோஸ்வுட், மஞ்சள், காட்டு இஞ்சி உள்ளிட்ட மரங்களை கண்டு ரசிப்பார்கள். வெயிலை மறைத்து நெடுநெடுவென உயர்ந்துள்ள மரங்களை பார்க்கும் போது பசுமையாக இருக்கும். தெப்பக்காடு யானைகள் முகாமில் யானை சவாரிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
அது போல் மசினகுடியில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள மோயார் ஆறு அமைந்துள்ளது. இது பவானி ஆற்றின் துணை ஆறு ஆகும். மோயார் ஆற்றின் வழியாக செல்ல படகு சவாரியும் உள்ளது. இத்தனை அழகான இடங்கள் இருப்பதால்தான் ஊட்டியை விட மசினக்குடிக்கு செல்வதை பலர் விரும்புகிறார்களாம். ஆனால் அழகு என்றுமே ஆபத்து என்பதற்கேற்ப அங்குள்ள சாலைகள், வன விலங்குகள், வனங்கள் ஆபத்தை தரும்.
இவை எல்லாம் கூட பரவாயில்லை, மசினக்குடியில் இரவு நேரத்தில் வாகனங்களை வழிமறித்து வனத்துறையினர் பணம் வசூலிப்பதாக சொல்கிறார்கள். பெங்களூரில் மல்லேஸ்வரத்தை சேர்ந்த தொழிலதிபர் சந்தீப் உதகை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து புகார் அளித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி இரவு 9மணிக்கு பேக்கரியில் சாப்பிட்டுவிட்டு குடும்பத்துடன் நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு காரில் சென்றுக் கொண்டிருந்தோம்.
அப்போது வனத்துறை அதிகாரிகள் அவரது காரை மறித்ததாகவும் விசாரணைக்காக வருமாறு மனைவி, சகோதரி, தான் உள்பட அனைவரையும் காட்டுக்குள் உள்ள வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அதிகாலை 3 மணி வரை எங்களை விசாரித்துவிட்டு காட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததாக வழக்கு பதிவு செய்து ஆளுக்கு ரூ. 10 ஆயிரம் என ரூ 30 ஆயிரம் ரூபாயை வசூலித்ததாகவும் தெரிவித்தார்.
மேலும் மற்றொரு காரில் வந்த கேரளாவை சேர்ந்த 7 இளைஞர்கள் கொண்ட குழுவை இரவு முழுவதும் சிறை வைத்த வனத்துறையினர், கூகுள் மேப்பை பார்த்து வந்த போது தவறி இந்த சாலையில் வந்துவிட்டதாக கூறியும் அவர்கள் 7 பேரிடமும் தலா ரூ 1000 என ரூ 7000 பெற்றனர் என்றார் சந்தீப். மேலும் தங்களிடம் ரூ 30 ஆயிரம் வாங்கியதை உயரதிகாரிகளிடம் கூறிய போது அவர்களும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சந்தீப் குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது தாங்கள் அபராதம் விதித்ததற்கான ரசீதை வழங்கியுள்ளோம். அந்த தொகையை நாங்கள் முதுமலையில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளின் நல நிதிக்கு அளிக்கிறோம். மசினக்குடியில் இரவு 9 மணிக்கு மேல் வனவிலங்குகள் நடமாட்டம் இருக்கும் என்பதால் சுற்றுலா பயணிகள் வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications