2 ஆண்டுக்கு முன்பே ஆதிபராசக்தி கோயிலுக்கு அருகே தனக்கு தானே சமாதி அமைத்தவர் பங்காரு அடிகளார்!
செங்கல்பட்டு: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்திற்கு அருகே தனக்கென ஒரு சமாதியை கட்டி வைத்துள்ளார் பங்காரு அடிகளார்.
கோயில்கள் நிறைந்த செங்கல்பட்டு மாவட்டத்தில் உலக பிரசித்தி பெற்ற ஆலயம் என்றால் அது மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி ஆலயம்தான். இந்த கோயிலை தோற்றுவித்தவர் பங்காரு அடிகளார்.

1941 ஆம் ஆண்டு சுப்பிரமணி என்ற பெயரில் விழுப்புரம் மாவட்டம் கரும்பாக்கம் கிராமத்தில் பிறந்த பங்காரு அடிகளார் செங்கல்பட்டு அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் பயிற்சியை முடித்தவர். ஆரம்பத்தில் சோத்துப்பாக்கம் அரசு ஆரம்ப பள்ளியில் ஆசிரியராக இருந்த பங்காரு அடிகளார், 1970 களில் மேல்மருவத்தூரில் ஆதி பராசக்தி சித்தர் பீடத்தை தொடங்கினார்.
தான் குடியிருந்த வீட்டின் பின்புறம் வேப்பமரத்தில் ஒரு கோயிலை உருவாக்கினார். 1966 ஆம் ஆண்டு வீசிய புயல் காற்றால் அம்மரம் வேரோடு சாய்ந்தது . அந்த வேப்பமரத்தின் அடியில் இருந்து சுயம்பு உருவானதாக சொல்லப்படுகிறது. அதையே கோயிலாக நிர்மாணித்தார் பங்காரு அடிகளார். ஆரம்பத்தில் குறி சொல்ல தொடங்கினார். மேல்மருவத்தூரில் தொடங்கி அக்கம்பக்கத்து ஊர்களுக்கும் அவருடைய புகழ் பரவியது.
ஆதிபராசக்தி அம்மனின் வடிவமாக தன்னை அறிவித்துக் கொண்டார். இதனால் பங்காரு அடிகளாரை அம்மா என்றே பக்தர்கள் அழைத்து வருகிறார்கள். பள்ளிகள், கல்லூரிகள் என தொடங்கி பெண் கல்வியை ஊக்குவித்தார். பெண்களுக்கு ஆன்மிகத்தில் புரட்சியையும் ஏற்படுத்தினார். இவர் ஆதிபராசக்தி மருத்துவ கல்வி மற்றும் பண்பாட்டு மையத்தின் தலைவராக விளங்கினார்.
இந்த நிலையில் இன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவருடைய உயிர் பிரிந்தது. இதை அறிந்த ஏராளமான செவ்வாடை பக்தர்கள் வந்துள்ளனர். பெண்கள், ஆண்கள் என கண்கலங்கி வருகிறார்கள். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே கோயிலுக்கு அருகே தனக்கென சமாதியை கட்டினார் பங்காரு அடிகளார்.












Click it and Unblock the Notifications