வழக்கறிஞர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: பார் கவுன்சில் எச்சரிக்கை
சென்னை: நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர்கள் வெள்ளிக்கிழமைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால், போராட்டத்தில் ஈடுபடும் வழக்கறிஞர்கள் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவர் என்று பார் கவுன்சில் ஆஃப் இந்தியா (பிசிஐ) எச்சரிக்கை விடுத்துள்ளது.
வழக்கறிஞர்களுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் அமல்படுத்திய சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகம், புதுச்சேரி வழக்கறிஞர்களில் ஒரு பிரிவினர், நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் வரும் ஜூலை 25-ஆம் தேதி ஈடுபடப் போவதாக தமிழ்நாடு, புதுச்சேரி அனைத்து வழக்குரைஞர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் செல்வம் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர்கள் வரும் 22-ஆம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும். தொடர்ந்து நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டால், போராட்டத்தில் ஈடுபடும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், அவர்கள் வக்கீல் தொழில் நடத்தவும் தடை விதிக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் தடை செய்யப்பட்ட வழக்கறிஞர்கள் யாரும் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட முடியாது எனவும் எனவே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வழக்கறிஞர்கள் வரும் 22-ஆம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications