கோத்தகிரி அருகே கரடி தாக்கி பெண் பலி; மூவர் படுகாயம் - பொதுமக்கள் போராட்டம்
உதகமண்டலம்: கோத்தகிரி அருகே கரடி தாக்கி தேயிலைத் தோட்ட பெண் தொழிலாளி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரடி தாக்கியதில் காயமடைந்த மேலும் மூன்று பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி அந்த பகுதி மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
நீலகிரி மாவட்டம், வடக்கு வனக்கோட்டம், ரேலியா அணை பீட் பகுதியில், தொட்டமுக்கை கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தை ஒட்டியுள்ள தேயிலை தோட்டங்களில் சிறுத்தை, கரடி நடமாட்டம் உள்ளது.

நேற்று மாலை, தொட்டமுக்கை கிராமத்தை சேர்ந்த பெண் மாதி, 45, அவரது கணவர் ஹாலன், மகன் தினகரன், உறவினர் குமார் ஆகியோர், தேயிலை பறித்து, கொள்முதல் நிலையத்தில் பசுந்தேயிலையை எடை போடச் சென்றனர். அப்போது, புதர் மறைவில் இருந்த கரடி, சாலையின் நடுவே ஓடிவந்து, மாதியை கடித்து இழுத்து சென்றது.
கரடி தாக்கியதை கண்ட மூவரும், பெண்ணை, காப்பாற்ற முயன்றனர். காப்பாற்ற முயன்ற மூவரையும் கரடி கடித்து குதறியது. அருகிலிருந்தோர் மீட்டு, கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
கரடி இழுத்துச் சென்ற, பெண்ணின் உடலை வனத்துறை, போலீசார், வருவாய்த்துறையினர் தேடினர். இரவு 7:00 மணியளவில், உடல் கண்டெடுக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக, கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பலியான மாதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் சமாதானம்
ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் வன விலங்குகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரண உதவி அளிப்பதோடு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னர் கலைந்து சென்றனர். இதைத் தொடர்ந்து 3 லட்ச ரூபாய் நிவாரண நிதியை மாவட்ட ஆட்சியர் அந்த குடும்பத்தினரிடம் வழங்கினார்.












Click it and Unblock the Notifications