திருமாவளவனை விடாமல் விரட்டி கடித்த தேனீக்கள்: பிரசாரத்தில் பரபரப்பு
சிதம்பரம்: தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவனை தேனீக்கள் விரட்டி விரட்டி கடித்தன. காயமடைந்த திருமாவளவன் உள்ளிட்ட தொண்டர்கள் தடுப்பூசி போட வேண்டிய நிலைக்கு ஆளாகினர்.

லோக்சபா தேர்தலில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் சிதம்பரம் தொகுதி வேட்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். இதற்காக செவ்வாய்கிழமையன்று திருமானூர் ஒன்றிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
காலை 8 மணிக்கு பிரசாரத்தை வாரணவாசியில் தொடங்கிய அவர் பல இடங்களில் பிரசாரம் செய்துவிட்டு மதிய உணவு சாப்பிட கோயில் எசனை-வெங்கனூர் கிராமங்களுக்கிடையே ஊராட்சிக்கு சொந்தமான ஒரு தோப்பில் தோழமை கட்சியினருடன் அமர்ந்தார்.
அப்போது அங்குள்ள மரத்தில் இருந்த தேனீக்கள் கலைந்து அனைவரையும் துரத்த ஆரம்பித்தது.
நெற்றியில் கொட்டிய தேனீ
இதில் வேட்பாளர் திருமாவளவன் தனது வாகனத்தில் ஓடி வந்து ஏற முயன்றபோது முழங்காலில் காயம் ஏற்பட்டது. அதே நேரத்தில் துரத்தி வந்த தேனீ வேட்பாளரின் நெற்றியில் கொட்டியது.
22 பேருக்கு தேனீ கடி
மேலும் அங்கு சாப்பிட்டு கொண்டிருந்த அனைவரையும் துரத்த ஆரம்பித்த தேனீக்கள் திருமாவளவன் தம்பி செங்குட்டுவன், வெங்கனூரை சேர்ந்த கலியபெருமாள், திண்டிவனம் துரைராஜன் உள்ளிட்ட 22 பேரை கொட்டின.
விடாமல் துரத்திய தேனீ
தொண்டர்களை சுமார் 1 கி.மீட்டர் தூரம் வரை தேனீக்கள் துரத்தி சென்றன. பலரும் அருகருகே இருந்த தோப்புகளிலும் வயல் வெளிகளிலும் ஓடி சென்று ஒளிந்து கொண்டனர்.
போலீசும் தப்பவில்லை
பாதுகாப்புக்காக வந்திருந்த போலீசாரும் தங்களது வாகனத்தில் தஞ்சமடைந்தனர். இரு சக்கர வாகனங்களில் வந்திருந்தவர்கள் விட்டால் போதும் என வாகனங்களை அங்கேயே நிறுத்திவிட்டு ஓடி சென்றனர். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக தேனீக்கள் விரட்டியடித்தால் அப்பகுதியில் ஒரே பரபரப்பு ஏற்பட்டது.
மருத்துவமனையில் தடுப்பூசி
இதில் தேனீக்கள் கொட்டிய வேட்பாளர் தொல்.திருமாவளவன் உள்பட 22 பேருக்கும் வெங்கனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடப்பட்டு மாத்திரை மருந்துகள் வழங்கபட்டன. சிறிது நேர ஓய்வுக்குப் பின்னர் மாலை 5.30 மணியிலிருந்து மீண்டும் பிரசாரத்தை தொடங்கினார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications