'என் மேல கேஸே பதிவு செய்யக் கூடாதுன்னு சர்க்குலர் அனுப்புங்க ஜட்ஜய்யா' - பீப் சிம்பு
பீப் பாடலுக்காக தன் மீது எங்குமே வழக்குப் பதிவு செய்யக் கூடாது என சுற்றறிக்கை அனுப்புமாறு நீதிமன்றத்தில் புதிய மனுத் தாக்கல் செய்துள்ளார் நடிகர் சிம்பு.
செய்யறதையெல்லாம் செஞ்சுபுட்டு திருவிழாவுல காணாமப் போன பையன்மாதிரி நிக்கிறான் பாரு- என்று கவுண்டமணி சொல்வாரே... அந்த மாதிரிதான் செய்து கொண்டிருக்கிறார் சிம்பு.
அனிருத்தும் அவரும் தாங்கள் செய்வது என்னவென்று தெரிந்தே திட்டமிட்டு உருவாக்கிய பாட்டுதான் அந்த பீப் கருமம்.
ஆனால் அந்த கருமத்தை யாரோ திருடி வெளியிட்டுவிட்டதாகவும், தன் பக்கம் தவறில்லை என்றும் வெட்கமோ, கூச்சமோ, மனசாட்சியோ இல்லாமல் பேசிய சிம்பு, தான் யாருக்கும் பயப்படவில்லை என்று சவடால் விட்டதோடு சரி. எங்கோ கண்காணாத இடத்தில் தலைமறைவாகிவிட்டு, வீரப்பன் கேசட் அனுப்பிய மாதிரி அவ்வப்போது அறிக்கை அனுப்பி, வழக்குகளுக்கு வாய்தா வாங்கிக் கொண்டிருக்கிறார்.
மழை வெள்ள பாதிப்பில் மக்கள் கடும் துயருற்ற நேரத்தில் ஒட்டுமொத்த மீடியாவின் கவனத்தையும் திசை திருப்பிய மாபெரும் குற்றத்தைச் செய்த உணர்வு கொஞ்சமும் இல்லாத இந்த பீப் பாய்ஸ் இப்போது முன்ஜாமின், கூடுதல் அவகாசம் என எல்லாம் வாங்கி விட்டனர்.
இந்த நிலையில், கடந்த வாரம் தமிழகம் டி.ஜி.பி.யிடம், நடிகர் சிம்பு தரப்பில் ஒரு மனு கொடுக்கப்பட்டது. அதில், "ஒரு குற்றத்துக்கு பல வழக்குகள் பதிவு செய்யமுடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு பல வழக்குகளில் தீர்ப்பு அளித்துள்ளது. ஆனால், ஆபாச பாடலை பாடியதாக ஒரு குற்றச்சாட்டுக்கு, தமிழகம் முழுவதும் பல்வேறு போலீஸ் நிலையங்களில், என் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகின்றன. இவ்வாறு வழக்குப்பதிவு செய்வது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிரானது. கோவையில் ஏற்கனவே என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், புதிதாக என் மீது வழக்குப்பதிவு செய்வது தேவையற்றது.
எனவே, ஆபாச பாடல் பாடியதாக என் மீது கொடுக்கப்படும் புகார் மீது வழக்குப்பதிவு செய்யக்கூடாது என்று எல்லா மாநகர போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் ஆகியோருக்கு சுற்றறிக்கை அனுப்பவேண்டும்," என்று கூறியிருந்தார். ஆனால், தமிழக டி.ஜி.பி. இதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்பதால், சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார் சிம்பு.
அதில், ‘ஏற்கனவே என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், புதிதாக வழக்கு எதுவும் பதிவு செய்யக்கூடாது என்று எல்லா மாநகர போலீஸ் கமிஷனர்களுக்கும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பும்படி தமிழக டி.ஜி.பி.க்கு உத்தரவிடவேண்டும்," என்று கோரியுள்ளார்.
இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.