பீப் பாடல் சர்ச்சை: சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிம்பு, அனிருத் மீதான மேலும் 2 வழக்குகள் வாபஸ்
சென்னை: பீப் பாடல் விவகாரம் தொடர்பாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடிகர் சிம்பு, அனிருத் ஆகியோர் மீது தொடரப்பட்ட மேலும் 2 வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன.
சிம்பு, அனிருத் கூட்டணியில் வெளியான பீப் பாடல் இணையதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதில், பெண்களை கேவலமாகவும், ஆபாசமாகவும் தனது இசை ஆல்பத்தில் பாடிய நடிகர் சிம்பு, அந்தப் பாடலுக்கு இசை அமைத்த இசை அமைப்பாளர் அனிருத் ஆகியோரைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அப்போது, சிம்பு, அனிருத் ஆகிய இருவரின் உருவப் படங்களும் எரிக்கப்பட்டன.

மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சைதாப்பேட்டை பெருநகர 9-வது நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் காசி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
23-வது கோர்ட்டில் பா.ம.க. மாவட்ட செயலாளர் வெங்கடேசன், விருகம்பாக்கம் பகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த லட்சுமணன் என்ற புதியவன், சாலிகிராமத்தைச் சேர்ந்த பிஸ்மி ஆகியோரும் வழக்குகள் தொடர்ந்தனர்.
கடந்த 28-ந் தேதி, 23-வது நீதிமன்றத்தில் தொடரப்பட வழக்குகள் விசாரணைக்கு வந்த போது, பாமக சார்பில் தொடர்ந்த வழக்கை அக்கட்சியின் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் திடீரென்று வாபஸ் பெற்றார். மற்ற 2 வழக்குகள் மீதான விசாரணையை அடுத்த மாதம் (ஜனவரி) 11-ந் தேதிக்கு தள்ளிவைத்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
இந்த நிலையில் 9-வது நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் காசி தொடர்ந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது. அதேபோல் 23-வது நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி புதியவன் தான் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்றார். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட 4 வழக்குகளில் 3 வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில், இன்னும் ஒரு வழக்கு மட்டும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications