சிம்பு தலைமறைவாகத் தான் இருக்கிறார்..சென்னை காவல்துறை திட்டவட்டம்
சென்னை: பீப் பாடல் விவகாரத்தில் சிம்பு தலைமறைவாகத் தான் இருக்கிறார் என்று சென்னை காவல்துறையினர் தெரிவித்து இருக்கின்றனர்.
இந்தப் பாடல் விவகாரத்தில் சிம்பு தலைமறைவாகிவிட்டார் என்றும் அதனால் அவரைப் பிடிக்க 2 தனிப்படைகளை அமைத்து இருப்பதாகவும் சென்னை காவல்துறையினர் தெரிவித்து இருந்தனர்.
ஆனால் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் இந்த குற்றச்சாட்டை மறுத்து சிம்பு எங்கும் தலைமறைவாக இல்லை. அவர் தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவை விட்டும் எங்கும் தப்பிச் செல்ல மாட்டார்.
இந்த விவகாரத்தை அவர் சட்டப்படி எதிர்கொள்வார் என்று பேட்டியளித்து இருந்தார். தற்போது இதனை சென்னை காவல்துறையினர் மறுத்துள்ளனர்.
சிம்பு எங்கும் தப்பிச்செல்லவில்லை எனில் அவர் நேரடியாக காவல்துறையினரிடம் வந்து விளக்கம் அளித்திருக்க வேண்டியது தானே.அவர் ஏன் அப்படிச் செய்யவில்லை.
நாங்கள் தேடுவது தெரிந்தும் அவர் தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலும் இல்லை. மேலும் சென்னையில் உள்ள அவரது வீட்டிலும் அவர் இல்லை.
இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது இந்த வழக்கில் அவர் தலைமறைவாகத் தான் இருக்கிறார் என்று அவர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
மேலும் தலைமறைவாக இருக்கும் சிம்புவை தேட தனிப்படைகள் அமைத்து இருப்பதையும் அவர்கள் உறுதி செய்திருக்கின்றனர்.
சிம்பு முன்ஜாமீன் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் வருகின்ற ஜனவரி 4ம் தேதிக்கு ஒத்தி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.