தீபாவிடம் 'எப்படியாவது' கையெழுத்து தேவை- தீபக்குக்கு உத்தரவு போட்ட சசிகலா- போயஸ் களேபர பரபர பின்னணி!
சென்னை: போயஸ் கார்டன் ஜெயலலிதா பங்களாவில் நேற்று நடந்த அடிதடிகள் அத்தனைக்கும் காரணமே சசிகலா போட்ட உத்தரவுதான் காரணம் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.
அதிமுக கோஷ்டிகள் இணைப்பு சிந்துபாத் கதைபோல நீண்டுகொண்டே போகிறது. இந்த இணைப்பு பேச்சுவார்த்தைக்குள் இன்னும் எத்தனை கோஷ்டிகள் கிளம்புமோ என்கிற நிலைமைதான் இருக்கிறது.
இந்த நிலையில் தீபா எனும் புயல் போயஸ் கார்டனை உலுக்கி எடுத்தது. தம்மை போயஸ் கார்டனுக்கு வரவழைத்து சகோதரர் தீபக் அடித்து துவைத்துவிட்டார் என ஏகத்துக்கும் தலைவிரி கோலமாக குற்றம்சாட்டினார் தீபா.

களேபரம்..
குழாயடிச் சண்டையைவிட படு கேவலமாக நடுத்தெருவில் நின்று கொண்டு 'புறம்போக்கு' போன்ற முத்துகளை உதிர்த்து தமது ஒரிஜனல் முகத்தை தீபா வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். இந்த களேபரத்தில் பத்திரிகையாளர்கள் சிலரது மண்டையும் உடைந்தது.

சசிகலாவே காரணம்
இவ்வளவு களேபரத்துக்கும் என்னதான் காரணம் என அதிமுக வட்டாரங்களில் நாம் விசாரித்தோம். அவர்கள் அனைவருமே கையை நீட்டுவது பெங்களூருவில் உள்ள சசிகலாவை நோக்கித்தான்.

எடப்பாடி அரசு தீவிரம்
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் பங்களா, சசிகலாவுக்கோ, தீபா அண்ட் கோவுக்கோ சென்றுவிடாமல் நினைவு இல்லமாக்கிவிடுவது என்பதில் படுமும்முரமாக இருக்கிறது தமிழக அரசு. இதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக இருப்பதை சசிகலா தரப்பு அறிந்து கொண்டது.

தீபக்குக்கு தூபம்
இதையடுத்து தீபக்கை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது சசிகலா தரப்பு. ஜெயலலிதாவின் சொத்து ஆண்வாரிசாகிய உனக்குதான் சேர வேண்டும்; இது தீபாவுக்கு போகக் கூடாது; ஆகையால் தீபாவை வரவழைத்து கையெழுத்து வாங்கிக் கொண்டு விரட்டிவிடு என உத்தரவு போட்டிருக்கிறது சசிகலா தரப்பு.

அடிதடி
இந்த கையெழுத்து விவகாரத்தை நேரடியாக சொல்லாமல் தீபாவை கார்டனுக்கு வரவழைத்திருக்கிறார் தீபக். அங்கே போன இடத்தில் கையெழுத்து போட்டுத்தர தீபாவுக்கு ஒரு கும்பல் நெருக்கடி கொடுத்திருக்கிறது. இந்த கையெழுத்து விவகாரத்தின் உச்சமாகத்தான் அடிதடி ரகளை என சினிமாவை மிஞ்சும் காட்சிகள் அரங்கேறின என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications