நீங்க காங்கிரசின் பினாமியா? திமுக மீது வெங்கய்ய நாயுடு கடும் பாய்ச்சல்
தமிழகத்தில் பாஜகவின் பினாமி ஆட்சி நடைபெறுகிறது என்று மு.க. ஸ்டாலின் கூறியதற்கு வெங்கய்ய நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்னை வந்துள்ள மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, தமிழகத்தில் பாஜக பினாமி ஆட்சி நடக்கிறது என்று சொன்ன ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்தார்.
சென்னையில் வெங்கய்ய நாயுடு செய்தியாளர்களிடம் பேசியதாவது: தமிழகத்தில் வறட்சி நிவாரண நிதியாக 2 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
தமிழகத்தில் மழை இல்லாததால் வறட்சி ஏற்பட்டது. இதனை ஆய்வு செய்ய தமிழகத்திற்கு மத்திய அரசு குழு ஒன்றை அனுப்பியது. ஆய்வு செய்த அந்தக் குழு மத்திய அரசுக்கு அறிக்கையை அளித்தது. அதன் அடிப்படையில் மத்திய அரசு நிதியை ஒதுக்கி அறிவித்தது.
பயிர்க் கடனை மாநில அரசுதான் தள்ளுபடி செய்ய வேண்டும். தேவையான நடவடிக்கைகளை மாநில அரசு தான் மேற்கொள்ள வேண்டும். திமுக மத்திய அரசில் அங்கம் வகித்த போது விவசாயிகளின் பிரச்சனைக்கு என்ன செய்தது.
மோடியின் பினாமி ஆட்சி
சமூக பொருளாதார வேற்றுமையை நீக்க மோடி முன்னுரிமை அளித்து செயல்பட்டு வருகிறார். ஆனால் தமிழ் நாட்டில் மோடியின் பினாமி ஆட்சி நடக்கிறது என்று சொல்கிறார்கள். அப்படி என்றால் முன்பு தமிழகத்தில் திமுக ஆண்ட போது காங்கிரஸ் கட்சியின் பினாமியாக செயல்பட்டதா?
அனைத்துக் கட்சிக் கூட்டம்
திமுக இப்போது அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியது. அதிமுகவும் பாஜகவும் இல்லாத கூட்டம் எப்படி அனைத்துக் கட்சிக் கூட்டமாகும்? விவசாயிகள் பிரச்சனையை அரசியலாக்க வேண்டாம்.
தலையீடு
தமிழ்நாட்டில் அதிமுகவில் நடப்பது உள்கட்சி விவகாரம். ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரின் பிரச்சனைகளில் மத்திய அரசின் தலையீடு இல்லை. மாநிலத்தில் நிலையான அரசு வேண்டும் என்று மத்திய அரசு கருதுகிறது. ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது, நல்லாட்சி நடக்க வேண்டும் என்று மக்கள் அவருக்கு வாக்களித்தார்கள்.
ஆதாயம் இல்லை
தமிழக மக்களுக்கு ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகளை அதிமுகவினர் நினைவில் கொள்ள வேண்டும். அதனை செய்ய வேண்டும். அதுதான் மக்களின் விருப்பமாக உள்ளது. தமிழகம் முன்னேற வேண்டுமானால் நிலையான ஆட்சி இங்கே இருக்க வேண்டும். இங்கு நடக்கும் பிரச்சனையால் பாஜகவிற்கு எந்தவித ஆதாயமும் கிடையாது என்று வெங்கய்ய நாயுடு கூறினார்.