ரூ.15 லட்சம் லஞ்சம் வாங்க முயன்ற சென்னை மண்டல பி.எஃப். ஆணையர் கைது
சென்னை: ரூ.15 லட்சம் லஞ்சம் வாங்க முயன்ற சென்னை மண்டல பி.எஃப். ஆணையர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை பிப்ரவரி 1ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையராக இருப்பவர் துர்கா பிரசாத். இவர், வருங்கால வைப்பு நிதி தொடர்பான பிரச்சினையில் நடவடிக்கை எடுக்காமல் இருக்க சென்னையில் உள்ள சவீதா கல்விக் குழும நிர்வாகத்திடம் 14 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து சிபிஐ போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் சிபிஐ அதிகாரிகள் குழு,பி.எஃப். ஆணையரக அதிகாரி துர்கா பிரசாத்தை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் துர்கா பிரசாத் சென்ற வாகனத்தை மறித்து சோதனையிட்டுள்ளனர். அப்போது வாகனத்தில் ரூபாய் 15 லட்சம் ரொக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து துர்கா பிரசாத் கைது செய்யப்பட்டார்.
மேலும், அவருக்கு உடந்தையாக இருந்த 2 அதிகாரிகள், ஓட்டுநர் ஒருவர் மற்றும் லஞ்சம் கொடுக்க முயன்ற சவீதா கல்விக் குழுமத்தைச் சேர்ந்த 3 பேரையும், சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை வரும் 1ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications