பாரத் பந்த்: புதுவையில் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் அடியோடு நிறுத்தம்- கடைகள் அனைத்தும் மூடல்!
புதுவை: அகில இந்திய தொழிற்சங்கங்களின் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தால் புதுவையில் அனைத்து தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன. பிரதான கடை வீதிகளில் அனைத்து கடைகளும் முழுமையாக மூடப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகினர்.
12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய தொழிற்சங்கங்கள் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன. இதனால் நாடு முழுவதும் சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
புதுவையில் தனியார் பேருந்துகளும், ஆட்டோக்களும் இயக்கப்படவில்லை. தமிழகம் மற்றும் புதுவை அரசு பேருந்துகளும் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்படுகிறது.
புதுவை முத்தியால்பேட்டையில் இன்று காலை இயக்கப்பட்ட ஒன்றிரண்டு தனியார் பேருந்துகள் மீதும் மர்ம நபர்கள் கல்வீசித் தாக்கினர். தமிழகம், கேரளா, கர்நாடகாவில் இருந்து புதுவைக்கு வரவேண்டிய காய்கறி லாரிகளும் இன்று வந்துசேரவில்லை. மேலும் புதுவையில் பிரதான கடைவீதிகளில் உள்ள கடைகள் முழுவதும் மூடப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்தமாக புதுவையே வெறிச்சோடி காணப்படுகிறது. இன்றைய வேலைநிறுத்தத்தால் புதுவையில் சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.