சீமான், அன்சாரி விடுதலை செய்யப்படும்வரை மண்டபத்திலேயே உள்ளிருப்பு போராட்டம் நடத்திய பாரதிராஜா
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானை விடுதலை செய்ய இயக்குநர் பாரதிராஜா வலியுறுத்தல்.
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் கோரி போராட்டம் நடத்தி வரும் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் உள்ளிட்டோர், சென்னை பல்லாவரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
கொலை முயற்சி வழக்கில் சீமானை கைது செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாயின. இந்த நிலையில், போலீசார் விடுவித்தும், திருமண மண்டபத்தை விட்டு வெளியேறுவதற்கு, இயக்குநர் பாரதிராஜா மறுத்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து, தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. சாலை மறியல், ரயில் மறியல் என, பல்வேறு கட்சிகள், அமைப்புகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. 10ம் தேதி சென்னையில் ஐபிஎல் போட்டி நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை அண்ணாசாலையில் நடந்த புரட்சி போராட்டம் நாடு முழுவதும் பேசப்பட்டது. அதையடுத்து சென்னையில் நடக்க உள்ள அனைத்து ஐபிஎல் போட்டிகளும் புனேவுக்கு மாற்றப்பட்டுள்ளன.

சென்னை அண்ணாசாலை புரட்சியின்போது, சேப்பாக்கம் மைதானத்துக்கு அருகே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், போலீசாரை தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு கறுப்பு கொடி காட்ட முயன்றதாக, சீமான் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்து, பல்லாவரம் ஸ்ரீகிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். நிகழ்ச்சிகள் முடிந்து பிரதமர் சென்றதும் அவர்கள் விடுதலை செய்யப்படுவர் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திருமண மண்டபத்தை சுற்றி அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டனர்.
போலீசாரை தாக்கியதாக தொடரப்பட்ட கொலை முயற்சி வழக்கில் சீமான் கைது செய்யப்படலாம் என்று பரவலாக செய்திகள் பரவின. இந்த நிலையில், போலீசார் விடுவித்தும், சீமான் உள்ளிட்டோரை விடுவித்தால் தான் வெளியே செல்வேன் என்று சிட்லபாக்கம் பகுதியில் உள்ள மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ள இயக்குநர் பாரதிராஜ் கூறிவிட்டார். திருமண மண்டபத்தை விட்டு வெளியேற அவர் மறுத்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சீமானை விடுவிக்கக் கோரி, நாம் தமிழர் கட்சியினர் திருமண மண்டபம் முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இதனிடையே இரவு 9 மணியளவில் சீமான் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர். இதன்பிறகு பாரதிராஜா விடுதலைக்கு சம்மதித்து வெளியே வந்தார்.












Click it and Unblock the Notifications