பெப்சி, கோக் விற்க மாட்டோம்... குடிக்க மாட்டோம்... இதுவும் ஜல்லிக்கட்டு போராட்டம்தான்!
சென்னை: தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்புக்கு எதிராகவும் நடந்து வரும் போராட்டத்தில், சத்தமின்றி ஒரு புரட்சி நடந்துள்ளது.
அதுதான் பெப்சி, கோக் பானங்களுக்கு எதிராகக் கிளம்பியுள்ள உணர்வு. அந்நிய பானங்களான பெப்சி, கோக் போன்றவற்றை இனி பருகுவதில்லை என பலரும் உறுதியெடுத்துள்ளதால், இவற்றின் விற்பனை இந்த மாதம் கடும் சரிவைச் சந்தித்துள்ளது.
அமெரிக்க அமைப்பான பீட்டா பல்வேறு சதிகளை அரங்கேற்றி ஜல்லிக்கட்டை அழிக்க முயற்சிப்பதோடு, நமது நாட்டின மாடுகளையும் காணாமல் அடித்து வருகிறது. இந்த சதிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க நாட்டுத் தயாரிப்புகள் அனைத்தையும புறக்கணிப்போம். குறிப்பாக பெப்சி, கோக் பானங்களை முற்றிலும் தவிர்த்து, இளநீர், மோர், பழச்சாறுகளைப் பருகி உள்நாட்டு விவசாயிகளுக்கு வாழ்வளிப்போம் என்ற கோஷம் தமிழகம் எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
சமூக வலைத் தளப் பயன்பாட்டாளர்கள் 'இனி பெப்சி, கோக் வாங்க மாட்டேன்.. பருகமாட்டேன்," என்ற படத்தை தங்கள் அடையாளப் படமாக வைத்துள்ளனர்.
தென் மாவட்டங்களில் வணிகர் சங்கங்கள் அதிரடியாக, இனி பெப்சி, கோக் உள்ளிட்ட அமெரிக்க தயாரிப்பு பானங்களை விற்பதில்லை என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.