100 ஆண்டுகளுக்கு பின் தஞ்சை பெரிய கோவில் தேர் வெள்ளோட்டம்! நமச்சிவாய முழக்கமிட்ட பக்தர்கள்!
தஞ்சாவூர்: தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில், 100 ஆண்டுகளுக்கு பின், இன்று தேர் வெள்ளோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் பாரம்பரிய சின்னமாகவும், சோழர் கால கட்டிட கலைக்கு சான்றாகவும் விளங்கி வருகிறது.
இந்த ஆலயத்தின் சித்திரைப் பிரம்மோற்சவ விழா 18 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். விழாவின் 15ஆம் நாளன்று தேரோட்டம் நடைபெறுவது வாடிக்கை. இங்கு, 19ஆம் நூற்றாண்டு பின், பல்வேறு காரணங்களால் தேரோட்டம் தடைப்பட்டது.

பெரிய கோவிலுக்கு புதிய தேர்
பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்து, 50 லட்சம் ரூபாய் செலவில் புதிதாகத் திருத்தேர் செய்யப்படும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி, கடந்த, 2013ம் ஆண்டு செப்டம்பரில், தஞ்சாவூர் மேல வீதி, கொங்கணேஸ்வரர் கோவில் வளாகத்தில், தேர் செய்வதற்கான பூர்வாங்க பணி துவங்கியது. தொடர்ந்து காமாட்சி அம்மன் கோவிலுக்கு எதிர்புறம், தேர் கட்டுமானப் பணி நடந்தது. தேர் பணிகள் முழுமையாக முடிவடைந்தது. தேர் தரையில் இருந்து சிம்மாசனம் மட்டம் வரை மூன்று நிலைகளாக 16.5 அடி உயரம் கொண்டது. 3 நிலைகளில் மொத்தம் 231 பொம்மைகள் இடம் பெற்றுள்ளன.

தேர் வெள்ளோட்டம்
தேர் வெள்ளோட்டம் இன்று காலை நடந்தது. தோ் நிறுத்தப்பட்ட இடத்தில் காலை 6 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தேரில் கலசம், குடை வைக்கப்பட்டது. சக்கரங்களுக்கு பூசணிக்காய் வைத்து திருஷ்டி கழிக்கப்பட்டது.

நமச்சிவாய முழக்கம்
பின்னர் 3 குருக்கள் தேரில் ஏறி அமர்ந்தனர். அவர்கள், ஓம் நமச்சிவாய, ஓம் நமச்சிவாய, தென்னாடுடைய சிவனே, என்னாட்டவருக்கும் இறைவா போற்றி போற்றி' என வாழ்த்து கோஷங்கள் முழங்க அதையே பக்தர்களும் திரும்ப கூறினர்.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்
பின்னர் குருக்கள் பச்சைக்கொடி காட்ட காலை 6.50 மணிக்கு கலெக்டர் சுப்பையன், தர்மபுர ஆதீனம் கட்டளை விசாரணை குமாரசாமி தம்பிரான், எம்.எல்.ஏ ரங்கசாமி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் அமுதா ரவிச்சந்திரன், அரண்மனை தேவஸ்தான் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, எஸ்.பி. தர்மராஜன், கோயில் இணை ஆணையர் குமார துரை, உதவி ஆணையர் ரமணி மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தோ் இழுத்தனர். தோ் வெள்ளோட்டத்தையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தேரோடும் வீதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட்டிருந்தது.

ஏப்.29ல் தேரோட்டம்
விஜயராமர் கோயில் எதிரில் இருந்து புறப்பட்ட தோ் வடக்குராஜ வீதி, கீழராஜ வீதி, தெற்கு ராஜ வீதி வழியாக மேலவீதியில் உள்ள தேர் மண்டபத்தை வந்தடையும். வரும் 29ம் தேதி காலை தேரோட்டம் நடைபெற உள்ளது.

பக்தர்கள் மகிழ்ச்சி
தஞ்சாவூர் வீதிகளில் தேர் ஓடி நூற்றாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இந்த தேர் வெள்ளோட்டமும் வரும் 29ஆம் நடைபெற உள்ள தோரோட்டம் தங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருப்பதாக தஞ்சாவூர்வாசிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications