ரயில்வே தேர்வு... திருச்சியில் குவிந்த ஆயிரக்கணக்கான பீகாரிகள்!

இன்று இந்தத் தேர்வு நடக்கிறது. டி பிரிவுக்கான தேர்வு இது. மிகவும் குறைந்த ஊதியம்தான் என்றாலும் பீகாரிலிருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தேர்வு எழுதுவதற்காக இத்தனை மைல் தூரத்தைக் கடந்து திருச்சியில் வந்து குவிந்துள்ளனர்.
ஆனால் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மிக மிக குறைந்த அளவிலேயே தேர்வில் கலந்து கொண்டனர். மொத்தம் 34,000 பணியிடங்களுக்காக இந்தத் தேர்வு நடக்கிறது.
வெள்ளிக்கிழைமையே ஏராளமான பீகாரிகள் திருச்சி ரயில் நிலையத்திற்கு வந்து விட்டனர். அங்கு பிளாட்பார்மிலேயே போர்வை, ஜமுக்காளத்துடன் செட்டிலாகி தேர்வுக்காக படித்து வந்தனர். இதனால் ரயில் நிலையம் முழுவதும் பீகாரிகள் மயமாக காணப்பட்டது.
டிராக்மேன், போர்ட்மேன், சபாய்வாலா, ஹெல்ப்பர், கலாசி ஆகிய வேலைகளுக்காக இந்தத் தேர்வை நடத்துகிறது ரயில்வே தேர்வு வாரியம். இதன் சம்பளம் ரூ. 1800தான். தெற்கு ரயில்வே சார்பில் நடத்தப்படும் இந்தத் தேர்வுக்கு தமிழகத்தை விட பீகாரிலிருந்து அதிக அளவிலானோர் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தேர்வு தேசிய அளவிலானது. இதனால்தான் பீகார்க்காரர்கள் அதிக அளவில் கலந்து கொண்டுள்ளனர்.
இதுகுறித்து பீகாரைச் சேர்நத் விகாஷ் குமார் ஜஸ்வால் என்பவர் கூறுகையில், நாங்கள் 5000 பேர் வரை வந்துள்ளோம். எங்களது மாநிலத்தில் இளைஞர்கள் பலர் வேலையில்லாமல் தவிக்கிறோம். இதனால்தான் கிடைக்கும் வேலையைச் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். வேலை தேடி ஓடிக் கொண்டிருக்கிறார்கள் பீகார் இளைஞர்கள் என்றார்.
முன்னா குமார் என்பவர் சென்னை மெட்ரோ ரயில் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இவரும் இத்தேர்வுக்கு வந்துள்ளார். இவர் பத்தாவது வகுப்பு படித்துள்ளாராம்.
கேரளாவைச் சேர்ந்தவர்களும் கணிசமான அளவில் வந்துள்ளனர்.
இந்தத் தேர்வுக்கு மொத்தம் 3 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்தத் தேர்வை 5 கட்டமாக ரயில்வே தேர்வு வாரியம் நடத்துகிறது. முதல் கட்டமாக திருச்சி, சென்னை, போர்ட்பிளேரில் இன்று தேர்வு நடைபெறுகிறது. 2வது கட்டம் நவம்பர் 17ம் தேதியும், 3வது கட்டம் நவம்பர் 24ம் தேதியும், நான்காவது கட்டம் டிசம்பர் 8ம் தேதியும் நடைபெறும். 5 மற்றும் கடைசி கட்டத் தேர்வு டிசம்பர் 12ம்தேதியும் நடைபெறுகிறதாம்.












Click it and Unblock the Notifications